Tuesday, February 18, 2020

பள்ளிகளின் கோடைக்கால விடுப்பில், பிள்ளை சும்மாத்தானே விளையாடிகிட்டு இருப்பான், ஏதாவது விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கட்டுமேன்னு, தன் நண்பர் ஒருவரின் ஆசாரி பட்டறைக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார் ஒரு  ஏழை தந்தை.

பணக்கார அய்யர் வீடு, அருகில் பட்டறை, சுதந்திரமாக சுற்றினான் சிறுவன், விளையாட்டு விளையாட்டாக லேசாக தொழிலும் கற்றுக் கொடுக்கப்பட்டது, பணக்கார வீட்டுனுள்ளும்  சுதந்திரமாக வலம் வந்தான் சிறுவன்...குடிசை வீட்டில் இருந்தவன், பணக்கார மாளிகையைப் பார்த்ததும் அதிசயமாக உணர்ந்தான்...வீட்டு மாமி அவனை நன்றாக நேசித்தாள்.

இவன் கொண்டு வரும் சாப்பாட்டைப் அவள் சாப்பிட்டு, அவள் சமைத்ததை சிறுவனுக்குக் கொடுத்தாள்...இவனுக்கு ஆச்சர்யமாக ஒன்றும் புரியவில்லை...இவனுக்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்கும் என்று அடிக்கடி கேட்டாள், வீட்டு நிலவரங்கள் கேட்பாள், மீன் பிடிக்கும் என்றான்...ஐய்யய்யோ அபச்சாரம் அபச்சாரம் என்றாள்...

மாமியின் இளைய மகன் நண்பனானான் உயிர் நண்பனானான், பலப்பல விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தார்கள்...

அப்பா ஒருநாள் கூடவே வந்தார்..."என்ன அய்யர்வாள்...பையனுக்கு வேலை கத்து குடுத்துட்டு இருக்கீரா ?" என்று, அணைச்சு வச்சிருந்த பாதி பீடியை பற்ற வைத்தார்....

"ஆமாம் ஓய் கத்துண்டு இருக்கான்"

"இல்லை, விடுமுறை முடியுதுல்ல, பிள்ளைய  மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் அதான் கேட்டேன்"

"சரி, அடுத்த லீவுக்கும் அனுப்பி வையும்"

அப்பாவுக்கு மாமி, பால் கலந்த கலவையில் சூடாக ஏதோ குடிக்க கொடுத்தாள். [[அப்புறம் அது ஹார்லிக்ஸ்'ன்னு தெரிந்து கொண்டேன்]]

அப்பாவும், அய்யரும் பேசுவதை மாமி கேட்டுக்கொண்டிருந்தாள்...

அடுத்தநாள், அய்யர் வெளியே எங்கேயோ போயிட்டார் ...மத்தியானம் ரகசியமாக சிறுவனை கிச்சனுக்குள் அழைத்தாள் மாமி, புரியாமல் போனான்.

அங்கே இவனுக்காக, இவன் விரும்பிய மீன் பொறித்தும், கறியாகவும் வைக்கப்பட்டு இவனுக்குப் பரிமாறினாள் மாமி, "ஐ மாமி நீங்க மீன் சாப்புடுவீங்க ?"  "ஸ்ஸ்ஸ் சத்தம்போடாம சாப்புடு முதல்ல" சாப்புட்டு முடித்ததும்..பலநாள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டே விட்டான் சிறுவன்.

"ஏன் மாமி தினமும் நான் கொண்டு வரும் கஞ்சி மற்றும் தேங்காய் தொவையலை நீங்க சாப்புடுறீங்க, எனக்கு தினமும் சுடு சோறும், விதவிதமா கூட்டுகளும் தாறீங்க, நீங்க மீன் சாப்பிட மாட்டீங்கல்லா ? அப்புறம் எனக்கு எதுக்கு மீன் சாப்பாடு தந்தீங்க "ன்னு கேட்டான்...

முகத்தில் கவலைப் படர.....கண்ணில் நீர் சிலிர்க்க, சிரிச்சிகிட்டே மாமி ஒரு கதை சொன்னாள்...

"தம்பி, முன்பு நம்ம ஊர்ல ஒரு கடுமையான  பஞ்சம் வந்துச்சு, அரிசியை கண்ணில் பார்க்கமுடியாத பஞ்சம், குருண அரிசிகூட கிடைக்கல, அதை வாங்கக்கூட காசில்லை...அப்பிடியே வாங்கினாலும் அநியாயமா கல்லையும் கூட அரச்சிப்போட்டு  தருவானுங்க, அப்போ நாங்களும் உங்க ஊர்லதான் இருந்தோம் ஒரு குடிசையில்...

அந்த ஊரில் மனிதாபிமானமுள்ள ஒரு அரிசி வியாபாரி இருந்தார்...பஞ்சத்தில் நாங்கள், பிள்ளைகள், தவித்ததைப் பார்த்து மனது பொறுக்காமல்...ரெண்டு சாக்கு மூட்டை அரிசி பணம் கொடுத்து வாங்கி, சைக்கிளில் வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வார், அங்கிருந்து திரும்பும்போது காய்ந்த மரச்சீனி கிழங்கு துண்டுகளை சீப்பாக வாங்கி, ஊருக்குக் கொண்டு வந்து, மற்ற வியாபாரிகள் காசுக்காக, கிலோ விலை மானாங்கன்னியமா வித்துகிட்டு இருந்தபோதும், அந்த மனிதர் கிலோ பதினைந்து பைசாவுக்கு எங்களுக்கு தந்து, பஞ்சம் தீரும்வரை பசியாற்றியவர், உடம்பில் சட்டை அணியாமல் அவர் கிழங்கை அளக்கும்போது, போலீஸ் அடிகளின் ரத்தவாருகள் கசிந்து கொண்டிருக்கும்...எங்கள் கண்ணிலும் ரத்தம் கசியும்...[[இப்படி அரிசி கடத்துபவர்களை அன்று ஜெயிலில் போடாமல், வடம் என்று சொல்லப்படும் கயிற்றால் போலீசார் அடித்து அனுப்பி விடுவார்களாம், பறிமுதலும் செய்வதில்லையாம், பஞ்சம் அப்படி]]

பஞ்சம் என்றால் பத்தும் இல்ல தம்பி...எல்லாமும் பறந்து போகுமில்லையா ? அப்பிடித்தான் கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் உங்க அம்மா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு சொல்ல...

"எங்கம்மாவை உங்களுக்கெப்பிடி தெரியும் மாமி ?"

"அதான் சொன்னேனே உங்க ஊர்லதான் அப்போ இருந்தோம்ன்னு ?"

"அப்போ அந்த அரிசி வியாபாரி ?"

"உங்க அப்பா."

அன்றுதான் அப்பாவின் உடம்பில் பதிவாகிருந்த தழும்புகளின் அர்த்தம் புரிந்து கண்ணில் கண்ணீர் முட்டியது.



3 comments:

  1. படித்து முடித்ததும் எங்கள் கண்களிலும் கண்ணீர் கசிவு..

    ReplyDelete
  2. மிகவும் நெகிழ்ந்தேன். அப்பாவின் நினைவுகள் உங்கள் மனதில் எப்போதும் உறைந்திருக்கும்! என் அப்பாவை பற்றியும் என் மனதில் இப்படி பல நிகழ்வுகள். என் தந்தையின் வறுமையில் இருந்த நண்பர் தன் மகளின் திருமணத்தன்று அதிகாலை திடீர் என்று மரணமடைந்து விட்டார். இப்போது நடக்காவிட்டால் பின்னால் நடப்பது கடினம் என்பதால் அந்த நண்பர் மறைந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று அவர் மகனை மிரட்டி கல்யாணம் ஆனவுடன் அதை சொல்லி முழு பொறுப்பையும் தானே ஏற்றார். எவ்வளவு திட்டு வாங்கினாரோ! ஆனால் அந்த பெண் வாழ்த்தி யிருப்பாள்!

    ReplyDelete
  3. மனதைத் தொட்ட பகிர்வு.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!