Tuesday, May 14, 2019

சீனி கிழங்கு...



சீனி கிழங்கு...

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவசாயம் பரிச்சயம் அவர்களுக்கு, எந்த செடி கொடிகளை பார்த்தாலும் சிறுசுலேயே அதன் பெயரை சொல்லி விடுவார்கள்...

அம்மாவை இங்கே கன்னியாகுமரியில் கட்டி கொடுக்க...எங்க பெரியம்மாவை [மூத்தம்மான்னு சொல்லுவோம்] உள்ளூரிலேயே ஒரு விவசாயிக்கு கட்டி கொடுக்க...

நாங்கெல்லாம் பிறந்த பிறகு அடிக்கடி அங்கே போவதுண்டு...காலையிலே ஆறுமணிக்கு தோட்டத்துக்கு கிளம்பினா ராத்திரி ஏழுமணிக்குத்தான் தோட்டத்திலிருந்து வீடு திரும்புவார்கள், ஒரு பெரிய குத்துபோனி நிறைய சோளக்கஞ்சி எடுத்துக்கொள்வார்கள்...மத்தியானம் சாப்பாட்டுக்கு அவ்வளவுதான்...

மதியம் ஆனதும், பனை ஓலையில் ஒரு கை சோளக்கஞ்சி போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுவார்கள்...மிளகாய் முதற்கொண்டு வெங்காயம் வரைக்கும் தோட்டத்திலேயே கிடைக்கும், மூத்தம்மா மகள் [அக்கா] கூடவேதான் தோட்டத்துக்குள் சுற்றுவேன், நொங்கு, இளநி, பிஞ்சு பருத்திக்காய், பயறு, பச்சை உளுந்து, பனம்பழம், கறிவேப்பிலை பழம், பனங்கிழங்கை புடுங்கி எடுத்து சுட்டு தருவாள் அக்கா [சாப்புட்டுருக்கீங்களா ?] செம ருசியாக மணமாக இருக்கும்.

ஒவ்வொரு செடிகொடிகளின் பெயர்களை சொல்லி தருவாள்...அப்பிடி செல்லும்போதுதான் சீனி கிழங்கு செடியை காட்டினாள், இன்னொரு விபரமும் சொன்னாள், அதாவது இது சிகப்பா இருக்குமே அந்த சீனிக்கிழங்கு இல்லை, முட்டை மஞ்சக்கரு மாதிரி அழகாக இருக்கும்ன்னு சொல்ல...[நான் அதற்குமுன்பு பார்த்ததில்லை]

அக்கா அக்கா எனக்கு அது வேணும்ன்னு சொல்ல...அக்கா கிணற்று பக்கமாக போயி மம்பட்டியை எடுக்க...மூத்தம்மாவும் கூடவே வந்தாங்க...அக்கா ஒரு செடி பக்கமாக வெட்டப்போக...மூத்தம்மா சொன்னார்கள்..."மண்ணு வெடிப்பு இருக்குற இடத்தில் தோண்டு புள்ள அப்போதான் விளைஞ்சிருக்கும்" அக்கா தோண்ட...அற்புதமான ஒரு பெரிய கிழங்கு வெளியே வந்தது...பரவசமாகிப்போனேன், உடனே  அவிச்சி தந்தாங்க, என்னா ருசி என்னா ருசி...

அதன் பின்பும் அநேகமுறை வீட்டில் சாப்பிட்டாலும் அந்த சுவை இது வரைக்கும் இல்லை...

சரி, நான் சொல்ல வந்தது என்னன்னா...இன்னைக்கு ஒரு சூப்பர் மார்க்கட் போயிருந்தேனா [கல்ஃப் மார்ட்] அங்கே நல்ல பிரஸ்சாக இந்த முட்டை மஞ்சள் கரு கலர் இருந்தது [எல்லா சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும் இருந்தாலும் இது கொஞ்சம் கண்ணைக்கவரும் விதம்] உடனே வாங்கி வந்து அவித்து சாப்பிட்டேன் இருந்தாலும் அக்கா பண்ணித்தந்த அந்த சுவை இல்லை, மலரும் நினைவோடு சாப்புட்டாச்சு !


2 comments:

  1. சுவையான மலரும் நினைவுகள்...

    ReplyDelete
  2. அருமையான நினைவுகள். எனக்கோ கும்பாவுல சோளக்கஞ்சி சாப்பிட்ட பொழுதுகள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!