Friday, January 8, 2021

ஆட்டோ சங்கர் 6

#By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 6 (இறுதி பகுதி) இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் செய்யாத கொலைக்கு தங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், நிரபராதியான தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இதனையடுத்து கொலையானவர்களின் மண்டையோடுகள் சூப்பர் இம்போசிஷன் முறையில் ஆய்வு செய்யப்பட்டு கொலை உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோரின் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தண்டனை பெற்றதில் பழனி, பரமசிவம் ஆகியோரின் ஆயுள் தண்டனை மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், சங்கர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த சினிமாக்களின் பாதிப்பால் தான் இந்த கொலைகள் நடந்ததாகவும், இதற்கு சினிமா தயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சங்கர், எல்டின் இருவரின் தூக்கையும் உறுதி செய்தனர். மேலும், சினிமா தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், கலை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய சினிமா, சமீப காலங்களில் வன்முறை மற்றும் ஆபாசத்தை முன் வைக்க எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், தூக்கு மேடையில் நிற்கும் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் எனும் தலைப்பில் நக்கீரன் இதழ் தொடர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் வெளிவராமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன. ஆனால், அவ்வாறு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1994ம் ஆண்டு அக்ட்டோபர் 7ம் தேதி வெளியான அந்த தீர்ப்பு இன்றளவும் சடட மாணவர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தனக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட பின்னரும் கூட ஆட்டோ சங்கர், தாம் விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என நம்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா நிராகரித்தார். இதனை அடுத்து 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சங்கரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. கடைசி வரையிலும் தூக்கிலிருந்து தப்பிக்க சங்கர் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருந்தது. ஆனால், அனைத்து கதவுகளும் அடைபட்ட நிலையில் 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு சங்கருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்டினுக்கு 28ம் தேதி காலை மதுரை சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சங்கரை இளம் வயதில் தந்தையுடன் தவிக்க விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்ட சங்கரின் தாயார் , சேலம் சிறைக்கு வந்து சங்கரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். சங்கரின் உடல் அவரது முதல் மனைவி ஜெகதீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த அழுகையில் ஒருவருக்கும் அனுதாபம் ஏற்படாமல் போனது, பிறவி பயனன்றி வேறல்ல என்றே கூற வேண்டும். ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான அடையாளமாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது என்றாலும், 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொலை குற்றவாளிகளில் ஒருவரான ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொலைக்காட்சிகளில் தொடராகவும், பின்னாளில் திரைப்படமாகவும் வெளிவந்தன.

2 comments:

  1. ஆட்டோ சங்கரின் திகில் வாழ்க்கையும் ஒரு பாடம் தான் ரவுடிகளுக்கு!

    ReplyDelete
  2. முகநூலிலும் வாசித்தேன் தல...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!