Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Friday, December 2, 2011

மரண தண்டனையின் வரலாறு 0+0=0 தான்.



ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மரணதண்டயை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 பேரில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் தவிர நளினி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூவரும் 20 ஆண்டுகளாக தூக்கு கயிற்றை எண்ணி எண்ணி சோர்ந்து விட்டனர். இப்படி மன உளைச்சலைகொடுத்ததே பெரிய தண்டனை தான்.


• ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் ஆக்கிமிப்புக்கு அவர் உத்தரவிட்டது தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னது.

• நேரடி குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டது

• மரண தண்டனை பெற்று தவித்து கொண்டிருக்கும் மூவரும் ஆதரவு அளித்தார்கள் என்ற
அடிப்படையில் மட்டுமே தண்டணையளிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருப்பதே போதுமானது. விடுதலை செய்யலாம் என்பது 
அனைத்து மனிதாபிமானிகளின் கருத்தாக உள்ளது. இந்த நியாயங்கள் ஏதுமில்லாத அஜ்மல் கஸாப் போன்ற நூற்று கணக்கானோரை கொன்றபயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கலாமா? ஏன்று கேட்டால் நாம் மனம் கொதித்து சொல்வோம் ஆம்..! விதிக்க வேண்டும் என்று.



அதனால் என்ன பலன் காண முடியும் என்று கேட்டால் நாம் அவனுக்கு அப்போது தான் வலிக்கும் அவன் அந்த வலியை உணர்வான் என்போம். சரி வலி உணர்ந்தவன் எங்கே இருப்பான் அவன் அழிந்திருப்பான். அப்புறம் எப்படி அந்த வலியை அவன் உணர முடியும்.. அப்புறம் ஏன் அவன் வலியை உணர வேண்டும்?

ஒருவன் ஒரு குடும்பத்தை வாகனம் ஏற்றி கொன்று விட்டான். அவனுக்கு எப்படி வலியை உணர வைப்பது.. அல்லது பாடம் புகட்டுவது.. அவன் குடும்பத்தையே வாகனம் ஏற்றி கொன்றுவிடலாமா..? அதன் பலன் என்னவாக இருக்கும்..

நாம் அரேபிய தண்டனை காட்டுமிராண்டிதனம் என்கிறோம். களவாடினால் கையை வெட்டு, கள்ள 
தொடர்புக்கு ‘அதை’ வெட்டி கொல்லும் தண்டனை என்கிறார்கள். நாம் அந்த குற்றத்திற்கெல்லாம் சிறைத் தண்டனை கொடுத்துவிட்டு கொலைக்கு மட்டும் கொலை என்கிறோம் இது காட்டுமிராண்டி தனம் இல்லையா?

தனியொரு மனிதன் ஒரு கொலை செய்தால் அவன் குணத்தை குறை சொல்கிறோம். ஆனால் 100 கோடி 
மக்கள் சாட்சியாக அரசு ஒரு கொலை செய்தால் அதை தண்டனை என்கிறோம்.. இது என்ன நியாயம்.
இந்த கேள்வியை முன்வைத்தால் பாதிக்கப்பட்டவிரின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் மனநிலையிலிருந்து தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் வெட்டுக்கு வெட்டு, கொலைக்கு கொலை என்று தான் தீர்ப்பளிக்க வேண்டும். இதை தான் மக்கள் விரும்புவார்கள். ஏனெனில் கிரிமினல் குற்றங்களுக்கு சிறை தண்டனை கொடுப்பதையே தண்டனையாக கருதவில்லை.


ஆகவே தண்டனை என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தண்டனைகளும் அறம், உலக 
அளவில் சோதிக்கப்பட்ட அறிவியல் , பகுத்தறிவு அடிப்படையில் தண்டனை முறைகளை வகுக்க வேண்டும்.


மரணதண்டனைக்கு குற்றங்களை தடுக்கும் ஆற்றல் உண்டா? குற்றங்கள் பொதுவாக..ஆதாய குற்றங்கள்..உணர்ச்சிவயக் குற்றங்கள்..மனவிகாரக் குற்றங்கள்..லட்சியக் குற்றங்கள்.


இதில் ஆதாய குற்றம் செய்பவர்கள் சட்டங்களை ஏமாற்றிவிட முடியும் என்று துல்லியமாக திட்டமிட்டு செயல்படுவார்கள். இவர்களுக்கு மரணதண்டனையும் தப்பிக்க கூடியதே..

 உணர்ச்சிவய குற்றமிழைப்போர் உணர்ச்சிவயத்தால் தான் என்ன செய்தோம் என்று என்பதையே 
உணரமாட்டார்கள். இவர்கள் தனக்கு என்ன தண்டனையை பற்றியும் சிந்திக்கப் போவதில்லை.

 இலட்சிய குற்றம் செய்வோர் தாம் கொண்ட லட்சியத்திற்க்காக உயிரையும் கொடுக்க துணிந்து 
குற்றங்களில் ஈடுபடுவர். இவர்களுக்கு மரண தண்டனை ஒரு பொருட்டே கிடையாது.. ஆக மரண தண்டனைக்கு எந்த குற்றத்தையும் தடுக்கும் ஆற்றல் இல்லை. மரணத்தில் ஆக்கப்பூர்வமாக ஒன்றுமில்லை. அது அழிவில் தொடங்கி அழிவில் முடியும் அழிவு சுழற்சி தான்.

 உலகில் மரண தண்டனை அளிக்கும் நாடுகளின் அனுபவம் என்ன? சீனா உலகின் முதன்மை மரண தண்டனைக்கார நாடு. ஓவ்வொரு ஆண்டும் 2000 பேருக்கும் 
மேல் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆண்டுக்கு ஆண்டு மரண தண்டனைக்கான ஆட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் போகிறது.

 இரண்டாமிடத்தில் திருவாளர் அமெரிக்கா.. அங்கும் இதே தொடர்கதை தான் நடக்கிறது. மரண 
தண்டனை விதிக்கப்பட்டு கொண்டே இருந்தாலும் குற்றங்கள் குறையாமல் நடக்கிறது.

 உலகில் குற்றம் குறைவாக நடக்கும் நாடு எது.. சுவிட்சர்லாந்து. அங்கு மரண தண்டனை
ஒழிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கு நல்லாட்சி நடக்கிறது. அதனால் குற்றங்கள்
குறைகிறது. 

இந்தியா தன்னை பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டி கொள்கிறது. ஆனால் இரு குட்டிநாடுகள் தன் முன்மாதிரி நடவடிக்கைகளால் இந்தியாவின் தலையில் குட்டி கொண்டிருக்கிறது. ஆம்.. நேபாளம் 1990 லும், பூடான் 2006 ம் ஆண்டும் மரண தண்டனையை ஒழித்தது. இரண்டு நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் போது அந்த நாடுகளை மன்னர்கள் தான் ஆண்டுகொண்டிருந்தார்கள்.

 ஒரு நாட்டின் சட்டத்திற்கும், அறத்திற்கும் இடைவெளி இல்லாமல் இருக்கும் போது தான் சட்டம் உயிர் பெரும். நம் 
நாட்டை அறம் ஆள்கிறதா..? அறம் ஆளாத நாட்டில் சட்டத்தின் வேலை பிணம் திண்ணுவது தான். அரசியலில் பழிவாங்கப்பட்டார்.. தவறாக தண்டிக்கப்பட்டார் என்று பின்னாலில் வரலாறு சொல்லும்.

 மரண தண்டனை எந்த வரலாற்றையும் விடுதலை செய்வதில்லை.......................
 மரண தண்டனையின் வரலாறு 0+0=0 தான்.



நன்றி : நக்கீரன்.

Friday, November 25, 2011

சிறை கம்பிகளுக்குள் கலைஞர்கள்....!!!


சிறை என்றால் கொடூரமானவர்களின் கொட்டடி, திருந்தாதவர்களை திருத்தும் இடம் என அனைவரும் எண்ணிக்கொண்டுருப்பார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மைதான். ஆனால் சிறைபட்டவர்கள் எல்லோரும் தவறு செய்யவே பிறக்கிறோம் என எண்ணி பிறந்தவர்கள்யில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுசெய்தவர்கள் தான் அதிகம்.



  அவர்கள் யாரையும் கொலைகாரர்களாகவே, ரவுடிகளாகவோ பார்ப்பதில்லை வேலூர் மத்திய சிறை நிர்வாகம். மனிதர்களாக பார்த்து அவர்களை அடிக்காமல்,
உதைக்காமல்  நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது.  அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல கவிஞர்களை, ஓவியர்களை, படிப்பாளிகளை, தொழில்கலைஞர்களை உருவாக்கிவருகிறது.  

  157 ஏக்கர் பரப்பளவில் 150 ஆண்டுகள் பழமையான வேலூர் மத்திய சிறையில் தான் இந்த ஆச்சர்யம். சிறைவளாகத்துக்குள் ஒரு குற்றவாளி வருகிறான் என்றால் அவனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி கையெழுத்து போட தெரியுமா? என்ன படிச்சிருக்க? என்ற கேள்வி தான்.

படிக்கலயா?  சரி, நாளையிலயிருந்து ஸ்கூல் 
போகணும்.  10வது படிச்சியிருக்கியா மேல ஏதாவது ஒரு டிகிரி படி என சிறைக்கு வருபவர்களுக்கு கல்வி பற்றி போதித்ததன் விளைவு... தற்போது இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக எம்.பி.ஏ 6 பேர், பி.சி.ஏ செகன்ட் இயர் 13 பேர், சி.எப்.என் என்கிற 6 மாத கோர்ஸ் 13 நபர்கள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக முதலாமாண்டில் எம்.பி.ஏ 6 பேர், எம்.ஏ தமிழ் 3 பேர், பி.ஏ வரலாறு 25 பேர். தமிழ்நாடு ஸ்டேட் போர்டு மூலமாக 8வது 40 பேர், 10வது 04 பேர், ஆக்சிலியம் காலேஜ் மூலமாக சி.ஐ.எம்.எஸ்ங்கற சர்டிப்கெட் கோர்ஸ் 5 பேர், டி.டீ.பி ஆப்ரேட்டர்க்கான பட்டயப்பயிற்சி 10 பேர் என கல்வி கற்று வருகிறார்கள் கைதிகள்.  

இவர்களுக்கு கற்றுதர ஊரிஸ், அக்சீலியம் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிறைக்கே வந்து பாடம் எடுக்கிறார்கள்.  8வது முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு டிகிரி முடித்த கைதிகள் பாடம் எடுக்கின்றனர்.  இந்த சிறை கல்விக் கூடத்திற்க்கு எம்.சி.ஏ படிக்கும் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் தான் மாஸ்டர்.

இவர் தன்னுடன், பாபு, சென்னையன், அசோக், மோகன், சொக்கலிங்கம் என டிகிரி படித்தவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு பாடம் எடுக்கிறார். கொலை வழக்கில் தண்டனை பெற்ற மயிலாடுதுறை செந்தில்குமாரும், எம்.எஸ்.சி, எம்.எட், எம்.பி.எல் முடித்து எம்.பி.ஏ படிக்கும் ஆயுள் தண்டனை கைதி அருர் சென்னாமூர்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்க அவரும் இவர்களின் ஆர்வத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

  இன்றைய நவயுகத்தில் கம்யூட்டரின் அவசியம் பற்றியும், உலகமே கம்ப்யூட்டர் மையமாகி வருவது பற்றியும் அறிந்து... அதற்கு ஏற்றாற்போல் இண்டர்நெட் இல்லாத கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் சிறையில் செயல்படுகிறது.

      கற்பதில் மட்டுமல்ல... கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.          சிறையில் நடக்கும் பொங்கல் விழா, தீபாவளி விழா மற்றும் கலை விழாக்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது இவர்கள் எழுதி தள்ளும் கவிதைகள் தான். கவி ரசம் சொட்டும்,

அருமையான மனிதாபிமான, ஐக்கூ கவிதைகளை எழுதி குவிக்கிறார்கள்.

 உலக பொது மறையான திருக்குறளின் 1330 குறளை எப்படி மாற்றி, மாற்றி கேட்டாலும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றலை சிறைக்கு வந்து கற்றுள்ளார் முனுசாமி. கவிஞர்கள் மட்டுமல்ல ரவிவர்மாக்களும் இருக்கிறார்கள். 

ஒவியம் வரைவது, சிலைகள் செய்வதிலும் தங்களது கை திறனை காட்டும் இவர்கள் வரைவதற்கோ, சிலை செய்வதற்கோ எந்த விதமான பொருட்களும் சிறையில்கிடைக்காத நிலையில் குளிக்க தரும் சோப்பில் வேஸ்டாகவும் துகள்களை சேர்த்து வைத்து விநாயகர் சிலை, அம்மன் சிலை, தாய்மையை போற்றும் பெண்மையின்சிலைகளை தத்ருபமாக வடித்துள்ளார் 52 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நாகேந்திரன் என்ற இளைஞர். சிலைகள் மட்டுமல்ல பல வகையான ஒவியங்களைவரைந்து பார்ப்பவர்களை அதன் பால் ஈர்த்து விடுகிறார்.

யாரை பார்த்தாலும் அவர்களை அப்படியே அச்சு அசலாக வரையும் அவரின் திறமை அவருக்கே சிறைக்கு வந்தபின் தான் தெரிந்துள்ளது. மரம் போன்ற ஒரே ஓவியத்தில்இந்திய தலைவர்கள் முகங்களை காட்சியமைத்து தன் தூரிகை திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.  

வேலூர் ரோட்டரி க்ளப் மூலமாக 10 தையல் மிஷின்களை இலவசமா பெற்று, லயன்ஸ் க்ளப் மூலமாக தையல் பயிற்சி தந்துவருகிறார்கள். தற்போது 50 பேருக்கும் மேல் தையல் கற்றுக்கொண்டு எல்லா விதமான ஆடைகளையும் தைக்கும் கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள்.

சுலபமான வேலை என்பதால் பல கைதிகள் தையல் கற்றுக்கொண்டு வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி தைக்கிறார்கள் இந்த கைதி உடையில் உள்ள இந்த தையல்கலைஞர்கள். தற்போது ஆர்வமுள்ள கைதிகளை 30 பிரிவுகளாக பிரித்து தையல் கலைஞர்களாக உருவாக்கிவருகிறார்கள்.

 அதுமட்டுமல்ல வேலூர் சிறையில் உள்ள கைதிகளின் காலணி தயாரிக்கும் கை திறனை கண்டு தீயணைப்பு துறை, காவல்துறை, வனத்துறையில் புதுசாக சேர்பவர்களுக்கு புது சூ ( காலணி ) தர 50 ஆயிரம் ஷீ க்கான ஆர்டர் இவர்களிடம் தந்துள்ளது அரசு. இங்கு பணி செய்யும் கைதிக்கு தோராயமாக மாதத்திற்கு 2000 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

அந்த பணத்தை கொண்டு வழக்கு செலவு, பசங்க படிப்பு செலவுக்கு என பயன்படுத்திக்கொள்கிறார்கள். விடுதலையாகி போகிறவர்கள் புதுசாக வாழ ஒரு  தொழிலை கற்று தந்த சந்தோஷத்தில் மேலும் ஊக்கமடைந்து காலணி தயாரிப்பு பிரிவின் டெக்னிக்கல் பிரிவு இன்சார்ஜ்ஜாக பணியாற்றுகிறார்கள் பாஸ்கர், கோபிநாதன், குமார் ஆகியோர். 

மெழுகு வத்தி தயாரிக்க, மருத்துவமனைகளுக்கு பேண்டேஜ் தயாரிக்க, புக்ஸ் பைண்டிங் செய்ய, ஆபிஸ் ஃபேடுங்க செய்வதில் தங்களது கை வண்ணத்தை இதற்கான தொழிலை கற்ற கைதி கலைஞர்கள் காட்ட அதில் ஈர்த்து போன அரசு அரசு அலுவலக ஃபேட் தயாரித்து வழங்க 5லட்சம் ஃபேட் க்கு ஆர்டர் தந்துள்ளது. 

      இதுமட்டுமில்லை சுற்று சூழலை காக்க தங்களால் ஆனா முயற்சியாக வேலூர் ரோட்டாரி க்ளப் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி சிறையில் நடமுயற்சியெடுத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை தற்போது நட்டுள்ளனர் இயற்கையின் மீது காதல் கொண்ட கைதிகள். 

      இதுப்பற்றி வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சேகரிடம் பேசியபோது, பிறக்கும் போது எல்லாருமே நல்லவர்கள் தான். வளர்ப்பு, சூழ்நிலைகள் தான் ஒருத்தரை குற்றவாளியாக மாத்துது. சிறை தண்டனை பெற்று உள்ளே வந்து அவுங்க செய்ததை நினைத்து தினம் தினம் அழும் போது மனிதனா பிறந்த எனக்கெல்லாம் ரொம்ப கஸ்டம்.


அப்படி சிறை தண்டனை பெற்று பல ஆண்டுகளா உள்ள இருக்கறவங்க மனம் உடைஞ்சி வாழ்க்கைய வெறுத்துவிட கூடாதுன்னு தான் அவுங்களுக்கு எதில் இன்ட்ரஸ்டோ அதில் அவர்களை ஈடுபடுத்துகிறோம். அப்படி ஈடுபடுத்தும் போது தான் பல கலைஞர்கள் தங்களோட திறமை தங்களுக்கே தெரியாம தெரிஞ்சிக்கிட்டாங்க.

அப்படி திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கறோம். தன்னோட கலையை ஒருத்தர் பாராட்டும் போது அவனுக்கு கிடைக்கிற சந்தோஷம் அளவிட முடியாதது. இதனால அவன்இன்னும் சாதனை புரிய துடிக்கிறான். சாதிக்க துடிப்பவர்களுக்குள்ள போட்டிகள் நடத்தி பரிசுகள் தருகிறோம்.

வேலை செய்றவங்களுக்கான கூலியும் தருறோம். அதை அவுங்க குடும்பத்தார் யாராவது பாக்க வர்றப்ப பணத்தை தந்து பசங்கள படிக்க வைன்னு சொல்லும் போது அவுங்க முகத்துல ஒரு சின்ன சந்தோசம் தெரியுமே அது தாங்க எங்களுக்கும் சந்தோஷம்.

ஒரு கைதியோட மனசை மாற்றி அவனை ஒரு மனிதனா மாற்றி திருத்தி அனுப்புகிறவனை வேதனைப்படுத்துவது இந்த சமுகம் தான். ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்து சிறைக்கு வந்தவனை ஜெயிலுக்கு போனவன், ஜெயிலுக்கு போனவன்னு பேசும் போதும், அவனுக்கு எந்த வேலையும் தராம சமுகம் புறக்கணிக்கும் போது மீண்டும்தப்பு பண்ண தூண்டுகிறது.
  தமிழ்நாட்டிலேயே வேலூர் சிறைய கல்வியில், ஒழுக்கத்தில், சுற்றுச்சூழலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்து இலக்கியத்தில், கல்வியில், ஓவியத்தில், தொழிலில்கலைஞர்கள் உருவாக்குவது தான் எங்களோட குறிக்கோள் அது விரைவில் நிறைவேறும் என்று நம்கிறோம் என்கிறார்.

      திருத்த முடியாதவர்களை எங்களால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கைதிகளை கலைஞர்களாக உருவாக்கும் முயற்சசியில் உள்ள வேலூர் மத்திய சிறைநிர்வாகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். 

நன்றி : நக்கீரன்.

Wednesday, November 16, 2011

கண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார்கள்




முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு   “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும் ஈழத் தமிழர்களின் படுகொலையின், போர் நிகழ்வின் 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாட்சி இல்லா ஓர் இனப் படுகொலையாக ராஜபட்சேவின் இலங்கை அரசால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரினை பற்றி உலக நாடுகள் அறியும் சாட்சியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த, ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணமான “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு விழா 9.1.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. 

இந்த நூல் குறித்து நூலாசிரியர் ஜெ.பிரபாகரன்,“இந்தப் புத்தகத்திற்காக 6மாதங்களுக்கும் மேலாக அலைந்து  போராடி படங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியர் நான் அல்ல, ஈழ விடுதலைப்போரில் ரத்தம் வெள்ளமாய் ஓட, உடல்கள் சிதற குண்டுகளுக்கு பலியான என் ஈழத் தமிழர் ஒவ்வொருவரும்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள். நான் இதற்கு ஆசிரியன் என்பது வெறும் மரபினால் குறிப்பிடப்படுவதே ஆகும்.

 உலக மனச்சாட்சியை தட்டி எழுப்பக்கூடிய வகையிலும், ராஜபட்சேவின் கொலைவெறியை உலகம் அறியும் வகையிலும் இந்தப் புத்தகத்தை போரில் உயிர் இழந்த எம் தமிழ் உடன்பிறப்புக்கள் தந்துள்ளனர்.

இந்த நூலில், 371 படுகொலைப் படங்களுக்கு கீழ், அவை எப்போது ?, எங்கு? நிகழ்ந்தன என்ற விவரம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிழற்படங்கள் மட்டுமல்லாமல், 4 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. 

1) இலங்கையின் பூர்வீகக்குடி தமிழ்க்குடிதான் என்பதற்கான 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதாரச்சான்றுகள் அடங்கிய பட்டியல், 2) 1956 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான போர் மற்றும் இனப்படுகொலை பற்றிய விவரப் பட்டியல் 3)இலங்கையில் அமைதியான முறையில் நடந்த அரசியல் போராட்டம் மற்றும் 4) அப்போராட்ட முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியடைந்ததின் விவரப்பட்டியல் என 4வகையான பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. 

ஆக மொத்தம், இந்நூல் ஈழத் தமிழரின் ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. ராஜபட்சேவால் நம் தமிழ் உடன்பிறப்புகள் படுகொலை செய்யப்பட்டதற்கு நாம் என்ன செய்தோம்? என்ற வேதனையான கேள்விதான் இந்தப் புத்தகம் உருவாக காரணமாக அமைந்தது.

ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர் 

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டு பேசவரவில்லை. இந்தப் புத்தகம் என் நண்பர் ஒருவரின் மூலம் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் மகன்களும் பார்க்க நேர்ந்தது. மூத்தவனுக்கு 21 வயது. அவன் இலங்கைப் பிரச்சனை குறித்து ஓரளவு அறிவான். இரண்டாவது மகனுக்கு இதைப்பற்றி தெரியாது. மூன்றாவது மகன் 7ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு இதைப்பற்றி அறியும் பக்குவமான வயதுகூட இல்லை. இவர்கள் இந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு இரவில் சாப்பிடவில்லை. இதுபற்றி இரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 7வது படிக்கும் எனது மூன்றாவது பையன், இந்த புத்தகத்தின் தலைப்பையே என்னிடம் கேள்வியாக கேட்டான். இதற்காக நான் என்ன செய்ய முடியும்?. அப்படிக் கேட்டவனுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பெரியவர்களான நாமே இதற்காக ஒன்றும் செய்யவில்லையே!

நான் தமிழனாக அல்ல. இந்தியனாகவும் அல்ல. ஒரு மனித நேயமுள்ளவனாக, ஈழத்தமிழனின் படுகொலைக்கு நான் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தப் புத்தகத்தை தமிழர்களிடம் கூட காட்டி இதைப் பற்றி விளக்கப்போவதும் இல்லை. நான் எனது தொழில் நிமித்தமாக ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானப் பயணத்தின் போது என்னுடன் கூடவே இந்தப் புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன். 

அப்போது, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இது பற்றி பேசப் போகிறேன். நான் சந்திக்கும் மொழியறியாத பல்வேறு நாட்டு மக்களிடம் ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றி விளக்கப்போகிறேன். அப்படிப்பட்ட வேற்று நாட்டு மக்களும் ஈழத் தமிழனின் அவலநிலையை அறியச்செய்யப் முயற்கிக்கப் போகிறேன். இதுதான் ஈழத்திற்காக நான் செய்யப்போகும் ஒரு சிறு பணியாக நினைக்கிறேன். இது என் கடமை.

தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான் 

இந்த நூலில், இவர்களுக்கு கிடைத்த 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் நம்மால் ஓரளவு சகித்துப் பார்க்கக்கூடிய படங்களாகவே உள்ளன. இவற்றை பார்க்கும் போதே நமது மனம் பதைபதைக்கிறது. இவற்றைவிட கொடூரமான படங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்தால் உண்மையில் நம் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், அதையெல்லாம் 60 வருடங்களாக எம் ஈழத்தமிழன் கண்ணெதிரே கண்டுகொண்டு வாழ்கிறார்கள்.   அப்படிப்பட்ட கடல் அளவு துயரினில் இந்த உலகம் அறிந்திட ஒரு துளியளவே இந்நூலில் தரப்பட்டுள்ளது. இன்னும் ஆவணப்படுத்தப்படாத, ஆவணப்படுத்த முடியாத எத்தனையோ அவலங்கள் உள்ளன. 

 பாலூட்டும் போது ஒரு தாய் குண்டு பாய்ந்து இறந்துவிடுகிறாள். இறந்துவிட்ட தாயின் மார்பில் பால்குடித்தபடி இருக்கிறது அந்தக் குழந்தை. இதை எப்படி ஆவணப்படுத்துவது. பெற்றவர்கள் கண்முன்பாகவே மகள், சிங்கள ராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்படுவதை எப்படி ஆவணப்படுத்துவது.

ஒருமுறை அங்குள்ள பள்ளிச் சிறுவர்கள் என்னிடம் கூறினார்கள்... அண்ணா, நாங்கள் பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்தான் பதுங்கி வாழ்வோம். அப்போது நாங்கள் அமர்ந்திருப்பதற்கே இடமிருக்காது. அப்படி இருக்கையில் எப்படி உணவு சமைப்பது. அப்படி உணவு சமைப்பதற்காக பதுங்குக் குழிகளின் மேட்டில் உலைவைப்போம்.  விறகுத் தீ பற்றி எரிகிறதா?, தண்ணீர் கொதித்துவிட்டதா?, அரிசி வெந்துவிட்டது என்று தலைதூக்கி எட்டி எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மனித உடல்கள் கைவேறு, கால்வேறாக சிதறுவதைதான் பார்க்க முடியும் என்று அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள். அவற்றை எல்லாம் எப்படி ஆவணப்படுத்துவது. 

இப்படி தம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதைக்கூட கூப்பிடும் தூரத்தில் இங்கு இருக்கும் தமிழன் அறிய வழியில்லை. இலங்கையில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி ஒரு சூழலிலும் துணிந்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் அடங்கிய குறுந்தகடுகளை எம் சகோதரர்கள் கொண்டுவந்து தந்தால், அதனை ஒளிபரப்ப இங்கிருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும் முன்வரவில்லை. இது ஊடக பயங்கரவாதம் இல்லையா?     

குண்டுவைத்தால் தேசிய பாதுகாப்புச்சட்டம் போடுவது நியாயம். ஆனால் குறுந்தகடு வைத்திருந்தவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதே.
அமைதியாக போராடிய தமிழர்கள் மீது, இலங்கை அரசு ஆயுதம் ஏந்தி தாக்கியது. தம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு பொறுக்கமுடியாமல், ஆயுதத்தால் தாக்குபவர்களுக்கு ஆயுதத்தால்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்து பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். பிரபாகரன் ஆயுதம் ஏந்தியது பயங்கரவாதம் என்றால், அந்தப் பயங்கரவாதம் தோன்றக் காரணமாக இருந்த ராஜபட்சேவின் இலங்கை அரசு பயங்கரவாதத்தின் தாய். 

புலிகள் பயங்கரவாதிகள், அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இந்தப் போரில், பச்சிளம் குழந்தைகள் கூட கொடூரமாக கொல்லப்பட்டனரே. அதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்.

ஐ.நா சபையே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்கிறது. ஆனால் இந்தியா தங்கள் நண்பன் என்கிறது. காமன் வெல்த் விளையாட்டுக்கு விருந்தினராக அழைத்து, ரத்தினக் கம்பளம் விரிக்கிறது. அது ரத்தினக் கம்பளம் அல்ல. அங்கே படுகொலை செய்யப்பட்ட நம் தமிழனின் ‘ரத்தக் கம்பளம்’. 20 மைல்கல் தூரத்தில் இருக்கும் தம் இனம் கொல்லப்பட்டதற்கு, இந்தத் தமிழக திமுக அரசு ராஜபட்சேவிற்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை. 

ஈழத்தமிழன் கொல்லப்பட்டதிற்கு நாம் என்ன செய்யலாம்?. நாம் என்ன செய்ய முடியும். உள்ளத்தில் பற்றி எரியும் தீயை, முத்துக்குமாரன் போல் உடலில் ஏற்றி நம்மை சாம்பலாக்கிக்கொள்ளதான் முடியும். இதற்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தமிழக ஆட்சியில் இருக்கும் கலைஞரும், ஜெயலலிதாவும்தான். ஆனால் அவர்களும் அந்த நேரத்தில் குரல் கொடுக்கவில்லை.    
  
இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியதே. ஆனால், நடந்தது என்ன? இப்போதும் நடப்பது என்ன?.

 போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே. பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியானார்களே. போர் முடிந்தும் ஆயிரக் கணக்கானோர் முள்வேலி முகாமிற்குள் இன்றும் வாழ்கிறார்களே. அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை. 

மறு குடியேற்றத்திற்கான வீடுகள் கட்ட இந்தியா கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. ஆனால் அந்தப் பணம் சிங்கள ராணுவத்தினர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும், ராணுவ குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும்தான் பயன்படுகிறது. ஆனால், போரில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலி முகாமிற்குள்தான் வதைபடுகிறார்கள். 

இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கு அதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது. இப்போது நாங்கள் கோட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே. 

அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம்.  நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்.

ராஜபட்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு அகதிகளாக குடியேறிய நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப் படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?. இதையாவது செய்ய நாம் ஒன்று படுவோம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்.

 “கண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார்கள்” என்று பைபிளில் வாசகம் ஒன்று உள்ளது. நாம் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தி விதைத்திருக்கிறோம். நிச்சயம் கௌரவத்தோடு அறுவடை செய்வோம். தனி ஈழத் தமிழ் நாட்டை வென்றெடுப்போம். 

நன்றி : நக்கீரன், அண்ட் படங்கள் கூகுள்.

Tuesday, November 15, 2011

அழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....!!!

செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை....





 உலகின் மூத்த மொழி தமிழ்.  தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான்.  இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.

 பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது.

தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.

இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு.


மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.

சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.


கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.


பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.

கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.

அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம்.  


அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.


பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.


நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.

இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.

எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.

சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 


இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள்.

நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான  தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.


இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.

முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள். 

அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத...  மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு...


இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.

நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.


கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.

பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள்.


இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி.

சரிதான் அது. பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.

நன்றி : நக்கீரன்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!