Sunday, November 6, 2016

அம்மா"வுக்கு முன்பாகவே வந்துவிடும் மயில்கள்...!



தர்மம் பண்ணனும் என்பதுதான் அய்யா வைகுண்டர் போதித்தது, அங்கேயே தர்மம் பண்ணுங்கன்னு பதி ஆளுங்களே உக்காந்து மொய் எழுதுவாங்க, இந்த இடத்தில் மொய் எழுதுகிறார்கள் என்றும், இன்னார் இவ்வளவு தர்மம் கொடுத்தார் என்றும் மைக்கில் அறிவிப்பார்கள்...


பாண்டிக்காட்டுல [நெல்லை மாவட்டம்] இருந்து வண்டி கட்டி குடும்பம் குடும்பமா வருவாங்க, சமைச்சு சாப்பிடுவாங்க...நம்ம ஊரு இளசுக எல்லாம் சைட் அடிக்க மைனர் ரேஞ்சிக்கு ரெடியாக இருப்பானுக...

தோப்புக்காட்டுக்குள்ளே சீட்டு விளையாட்டு நடக்கும், போலீஸ் துரத்தல் நடக்கும், ஊருக்குள்ளே கத்தி குத்து சம்பவம் நடக்கும், கத்தி வச்சிருந்தவன் ஹீரோ ரேஞ்சில் பார்க்கப்படுவான்.

ராத்திரி சைக்கிள்ல லைட் இல்லேன்னு உள்ளூர்காரனையே போலீஸ் பிடிக்கும், அதுக்கு பஞ்சாயத்து பண்ணணு வயசு கூட்டம் கிளம்பும்...

எங்கம்மா பாண்டிக்காட்டுல இருந்து வாரங்கன்னாலே, அம்மா பஸ்ஸில் வந்து இறங்குமுன், பதி"யில் வசித்த மயில்களுக்கு தெரிந்து வீட்டுக்கு வந்துவிடும், மயில்கள் வந்ததை வைத்து நாங்களும் குறிப்பறிந்து பஸ்டாப்பில் போயி காத்திருப்போம் அம்மாவுக்காக...[ஊரில் ஆச்சரியப்படுவார்கள், வேறு எந்த வீட்டுக்கும் அந்த மயில்கள் போகாது] 

பாண்டிக்காட்டில் இருந்து கொண்டு வரப்படும், கம்பு, சோளம், பயிறு வகைகளை எங்களுக்கு முன் அம்மா பரிமாறுவது அந்த மயில்களுக்குத்தான்...!

வருஷத்துக்கு மூன்று திருவிழா என்றாலும், வைகாசி மாசம் திருவிழாதான் களை கட்டும் கூட்டம்.

கிருஷ்ணா விலாஸ் மிட்டாய் கடை ரொம்ப பேமஸ்...மைக்கில் அலறி அலறி அழைப்பார்கள், போட்டி போட்டு...[இப்போவும் இருக்கு] அங்கே லட்டு களவாண்டு கடை ஓனர்கிட்டே கொட்டு வாங்குனதுல ஒருத்தன்தான் அவர் மகளை கல்யாணம் கட்டி அந்த கடைக்கு ஓணரா இருக்கான்.

11 நாள் திருவிழா...மீன் கடை இருக்காது, மீன் யாரும் சாப்பிட மாட்டார்கள்...

நாகர்கோவில் டூ சாமிதோப்பு சிறப்பு பஸ்கள் விடப்படும்.

அருகில் உப்பளம் உண்டு, அதை நம்பி அந்த ஊரில் குடியேறியவர்கள் அநேகர், சமத்துவ புரம் போல எல்லா ஜாதியினரும் ஒன்றாக வாழும் ஊர்.

ஆண்டிப் பண்டாரங்களின் பாசறை, புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கே கொண்டு வந்து விலங்கில் கட்டிப்போடுவார்கள்...

பிச்சைக்காரர்கள் வந்து குவிந்து விடுவார்கள்...வீடுவீடாக பிச்சையெடுக்க வருவார்கள்...

ஸ்கூல் மைதானத்தில், நரிக்குறவர்கள் குடும்பம் குடும்பமாக டெண்ட் அடித்து, ஆமைக்கறி சமைத்து சாப்பிடுவார்கள்...

ராட்டினங்கள், மிருகக்காட்சி சாலை, சர்பத், பாயாசம், சுக்கு காபி, சாக்குல கட்டி பிஞ்சிபோன பேரீச்சம் பழம், காராசேவ், விதவிதமான பண்டங்கள்...

சர்க்கஸ், கன்னாங் கடைகள்...சினிமா....

நான்கு பெரிய நாவல்பழ மரங்கள்...அதில் யானைகளை கொண்டு வந்து கட்டிப்போட்டிருக்கும் அழகு, திடீரென மதம்பிடிக்கும் யானைகள்...

புதிதாக திறக்கும் தோசை, இட்லி  ஹோட்டல்கள்...

காசே இல்லாமல் நாங்கள் என்ஜாய் செய்த காலம் அது...இப்போது எல்லாமே டிஜிட்டல் மாயம்...சகிக்கவில்லை !

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு என்னும் ஊரில் உள்ள அய்யா வைகுண்டர் பதி திருவிழா பற்றி சொன்னேன் !

நாங்கள் இந்து அல்ல.




5 comments:

  1. நினைவுகள்..... ரசிக்க வைத்த பகிர்வு. இப்போதைய டிஜிட்டல் உலகமும் அதன் மாயையும் - ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    ReplyDelete
  2. இப்போது இதில் பாதியாவது நடக்கிறதா....?

    ReplyDelete
  3. உங்கள் மலரும் நினைவில் அருமை! ஆனால் இன்றைய தலைமுறை நிச்சயம் பலதை இதில் பார்த்து இருக்காது!

    ReplyDelete
  4. டிவியில் பார்த்து இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. அய்யா வைகுண்டர் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே... நண்பா..
    அரகரா குரு பிச்சை... என்று தான் பிச்சை கேப்பாவ.. னு எழுதி இருக்கலாமே..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!