Tuesday, February 18, 2020

மஞ்சள் காமாலை மருந்து.



கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...

வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.

ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...

மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.

போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...

அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...

உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.

ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...

தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...

நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.

இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...

மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...

ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.

அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!

பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!

என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------

 [[கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...

யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...
அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
பாபநாசம் பஸ்நிலையத்தின்  அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.
சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]
பள்ளிகளின் கோடைக்கால விடுப்பில், பிள்ளை சும்மாத்தானே விளையாடிகிட்டு இருப்பான், ஏதாவது விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கட்டுமேன்னு, தன் நண்பர் ஒருவரின் ஆசாரி பட்டறைக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார் ஒரு  ஏழை தந்தை.

பணக்கார அய்யர் வீடு, அருகில் பட்டறை, சுதந்திரமாக சுற்றினான் சிறுவன், விளையாட்டு விளையாட்டாக லேசாக தொழிலும் கற்றுக் கொடுக்கப்பட்டது, பணக்கார வீட்டுனுள்ளும்  சுதந்திரமாக வலம் வந்தான் சிறுவன்...குடிசை வீட்டில் இருந்தவன், பணக்கார மாளிகையைப் பார்த்ததும் அதிசயமாக உணர்ந்தான்...வீட்டு மாமி அவனை நன்றாக நேசித்தாள்.

இவன் கொண்டு வரும் சாப்பாட்டைப் அவள் சாப்பிட்டு, அவள் சமைத்ததை சிறுவனுக்குக் கொடுத்தாள்...இவனுக்கு ஆச்சர்யமாக ஒன்றும் புரியவில்லை...இவனுக்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்கும் என்று அடிக்கடி கேட்டாள், வீட்டு நிலவரங்கள் கேட்பாள், மீன் பிடிக்கும் என்றான்...ஐய்யய்யோ அபச்சாரம் அபச்சாரம் என்றாள்...

மாமியின் இளைய மகன் நண்பனானான் உயிர் நண்பனானான், பலப்பல விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தார்கள்...

அப்பா ஒருநாள் கூடவே வந்தார்..."என்ன அய்யர்வாள்...பையனுக்கு வேலை கத்து குடுத்துட்டு இருக்கீரா ?" என்று, அணைச்சு வச்சிருந்த பாதி பீடியை பற்ற வைத்தார்....

"ஆமாம் ஓய் கத்துண்டு இருக்கான்"

"இல்லை, விடுமுறை முடியுதுல்ல, பிள்ளைய  மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் அதான் கேட்டேன்"

"சரி, அடுத்த லீவுக்கும் அனுப்பி வையும்"

அப்பாவுக்கு மாமி, பால் கலந்த கலவையில் சூடாக ஏதோ குடிக்க கொடுத்தாள். [[அப்புறம் அது ஹார்லிக்ஸ்'ன்னு தெரிந்து கொண்டேன்]]

அப்பாவும், அய்யரும் பேசுவதை மாமி கேட்டுக்கொண்டிருந்தாள்...

அடுத்தநாள், அய்யர் வெளியே எங்கேயோ போயிட்டார் ...மத்தியானம் ரகசியமாக சிறுவனை கிச்சனுக்குள் அழைத்தாள் மாமி, புரியாமல் போனான்.

அங்கே இவனுக்காக, இவன் விரும்பிய மீன் பொறித்தும், கறியாகவும் வைக்கப்பட்டு இவனுக்குப் பரிமாறினாள் மாமி, "ஐ மாமி நீங்க மீன் சாப்புடுவீங்க ?"  "ஸ்ஸ்ஸ் சத்தம்போடாம சாப்புடு முதல்ல" சாப்புட்டு முடித்ததும்..பலநாள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டே விட்டான் சிறுவன்.

"ஏன் மாமி தினமும் நான் கொண்டு வரும் கஞ்சி மற்றும் தேங்காய் தொவையலை நீங்க சாப்புடுறீங்க, எனக்கு தினமும் சுடு சோறும், விதவிதமா கூட்டுகளும் தாறீங்க, நீங்க மீன் சாப்பிட மாட்டீங்கல்லா ? அப்புறம் எனக்கு எதுக்கு மீன் சாப்பாடு தந்தீங்க "ன்னு கேட்டான்...

முகத்தில் கவலைப் படர.....கண்ணில் நீர் சிலிர்க்க, சிரிச்சிகிட்டே மாமி ஒரு கதை சொன்னாள்...

"தம்பி, முன்பு நம்ம ஊர்ல ஒரு கடுமையான  பஞ்சம் வந்துச்சு, அரிசியை கண்ணில் பார்க்கமுடியாத பஞ்சம், குருண அரிசிகூட கிடைக்கல, அதை வாங்கக்கூட காசில்லை...அப்பிடியே வாங்கினாலும் அநியாயமா கல்லையும் கூட அரச்சிப்போட்டு  தருவானுங்க, அப்போ நாங்களும் உங்க ஊர்லதான் இருந்தோம் ஒரு குடிசையில்...

அந்த ஊரில் மனிதாபிமானமுள்ள ஒரு அரிசி வியாபாரி இருந்தார்...பஞ்சத்தில் நாங்கள், பிள்ளைகள், தவித்ததைப் பார்த்து மனது பொறுக்காமல்...ரெண்டு சாக்கு மூட்டை அரிசி பணம் கொடுத்து வாங்கி, சைக்கிளில் வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வார், அங்கிருந்து திரும்பும்போது காய்ந்த மரச்சீனி கிழங்கு துண்டுகளை சீப்பாக வாங்கி, ஊருக்குக் கொண்டு வந்து, மற்ற வியாபாரிகள் காசுக்காக, கிலோ விலை மானாங்கன்னியமா வித்துகிட்டு இருந்தபோதும், அந்த மனிதர் கிலோ பதினைந்து பைசாவுக்கு எங்களுக்கு தந்து, பஞ்சம் தீரும்வரை பசியாற்றியவர், உடம்பில் சட்டை அணியாமல் அவர் கிழங்கை அளக்கும்போது, போலீஸ் அடிகளின் ரத்தவாருகள் கசிந்து கொண்டிருக்கும்...எங்கள் கண்ணிலும் ரத்தம் கசியும்...[[இப்படி அரிசி கடத்துபவர்களை அன்று ஜெயிலில் போடாமல், வடம் என்று சொல்லப்படும் கயிற்றால் போலீசார் அடித்து அனுப்பி விடுவார்களாம், பறிமுதலும் செய்வதில்லையாம், பஞ்சம் அப்படி]]

பஞ்சம் என்றால் பத்தும் இல்ல தம்பி...எல்லாமும் பறந்து போகுமில்லையா ? அப்பிடித்தான் கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் உங்க அம்மா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு சொல்ல...

"எங்கம்மாவை உங்களுக்கெப்பிடி தெரியும் மாமி ?"

"அதான் சொன்னேனே உங்க ஊர்லதான் அப்போ இருந்தோம்ன்னு ?"

"அப்போ அந்த அரிசி வியாபாரி ?"

"உங்க அப்பா."

அன்றுதான் அப்பாவின் உடம்பில் பதிவாகிருந்த தழும்புகளின் அர்த்தம் புரிந்து கண்ணில் கண்ணீர் முட்டியது.



உடலுக்கு குளிர்ச்சி.......


உடலுக்கு குளிர்ச்சி.......



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!