Friday, January 8, 2021

ஆட்டோ சங்கர் 6

#By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 6 (இறுதி பகுதி) இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் செய்யாத கொலைக்கு தங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், நிரபராதியான தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இதனையடுத்து கொலையானவர்களின் மண்டையோடுகள் சூப்பர் இம்போசிஷன் முறையில் ஆய்வு செய்யப்பட்டு கொலை உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோரின் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தண்டனை பெற்றதில் பழனி, பரமசிவம் ஆகியோரின் ஆயுள் தண்டனை மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், சங்கர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த சினிமாக்களின் பாதிப்பால் தான் இந்த கொலைகள் நடந்ததாகவும், இதற்கு சினிமா தயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சங்கர், எல்டின் இருவரின் தூக்கையும் உறுதி செய்தனர். மேலும், சினிமா தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், கலை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய சினிமா, சமீப காலங்களில் வன்முறை மற்றும் ஆபாசத்தை முன் வைக்க எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், தூக்கு மேடையில் நிற்கும் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் எனும் தலைப்பில் நக்கீரன் இதழ் தொடர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் வெளிவராமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன. ஆனால், அவ்வாறு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1994ம் ஆண்டு அக்ட்டோபர் 7ம் தேதி வெளியான அந்த தீர்ப்பு இன்றளவும் சடட மாணவர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தனக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட பின்னரும் கூட ஆட்டோ சங்கர், தாம் விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என நம்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா நிராகரித்தார். இதனை அடுத்து 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சங்கரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. கடைசி வரையிலும் தூக்கிலிருந்து தப்பிக்க சங்கர் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருந்தது. ஆனால், அனைத்து கதவுகளும் அடைபட்ட நிலையில் 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு சங்கருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்டினுக்கு 28ம் தேதி காலை மதுரை சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சங்கரை இளம் வயதில் தந்தையுடன் தவிக்க விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்ட சங்கரின் தாயார் , சேலம் சிறைக்கு வந்து சங்கரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். சங்கரின் உடல் அவரது முதல் மனைவி ஜெகதீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த அழுகையில் ஒருவருக்கும் அனுதாபம் ஏற்படாமல் போனது, பிறவி பயனன்றி வேறல்ல என்றே கூற வேண்டும். ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான அடையாளமாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது என்றாலும், 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொலை குற்றவாளிகளில் ஒருவரான ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொலைக்காட்சிகளில் தொடராகவும், பின்னாளில் திரைப்படமாகவும் வெளிவந்தன.

Thursday, January 7, 2021

ஆட்டோ சங்கர் 5

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 5 சங்கர் தொடர்பான விவகாரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கர் இருந்தது என்னவோ சிறைதான் என்றாலும், அவனுடைய பண பலமும், அவனுக்கிருந்த செல்வாக்கும் சிறையில் அவனுக்கென தனி சுதந்திரத்தை வழங்கியிருந்தது என்பதை மறந்து விட கூடாது. ஆகவேதான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கூட காவல்துறையினர் சங்கருக்கு நெருக்கடி கொடுத்ததில்லை. ஒரு முறை மத்திய சிறையில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று சாவகாசமாக சாப்பிட்டு விட்டு சென்றதெல்லாம் சங்கருக்கும் காவலர்களுக்குமான நெருக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டின. அந்த வகையில் சிறையில் இருந்து சங்கர் தப்பிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிலர் உதவியிருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது. இதுமட்டுமல்லாமல் சிறையில் இருந்த கணபதி என்பவரை சந்திக்க அவரது மனைவி தேவி வரும் சமயங்களில் தேவியுடன் சங்கர் பேசி வந்துள்ளார். பெண்களுடன் அதிகளவில் நேரத்தை செலவிடும் சங்கர் அங்கும் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார். நாளைடைவில் கணவனை பார்க்க தவறிய தேவி, சங்கரை சந்திப்பதை வழக்கமாகி கொண்டுள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்த சங்கரின் முதல் மனைவி ஜெகதீஸ்வரி, தேவியுடன் கட்டி புரண்டு சிறை வாசலிலேயே சண்டை போட்டதும், அதனை காவல் துறை அதிகாரிகள் விலக்கி விட்டதும் நடந்திருக்கிறது. இந்நிலையில் தான் சிறையில் இருந்து சங்கர் உள்ளிட்டோர் தப்புவதற்கு தேவியை பயன்படுத்தி கொண்டனர். சங்கரின் மீதான ஆசையில் தேவி இவர்களோடு இணைந்து செயல்பட்டார். இவர்களை பிடிப்பதற்கு, சிறைத் துறை, சிபிசிஐடி , மாநகர காவல் துறை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தினர். தனிப்படை போலீஸாரின் தேடுதலில் சங்கருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் ராஜாவும், சுண்டல் குமாரும் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா சென்ற தனிப்படை போலீசார் ரூர்கேலா அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சங்கரை சுற்றி வளைத்தனர். கணபதியின் மனைவி தேவியை திருமணம் செய்து அவருடன் வாழ ஆரம்பித்திருந்த சங்கரை சிறையில் இருந்து தப்பிய 12 நாட்களில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானம் மூலமாக அவர்கள் இருவரும் சென்னை கொண்டு வரப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டான் சங்கர் . சங்கரின் தம்பி மோகனும், கூட்டாளி செல்வராஜும் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் தொடர்பான வழக்கு தனியாக நடைபெற்றது. இறுதியில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் உள்ளிட்ட 8 பேரும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றே அப்போதும் தெரிவித்தனர். 8 பேர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சங்கர், எல்டின், சிவாஜி உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.... நாளையே இப்படம் கடைசி...

Tuesday, January 5, 2021

ஆட்டோ சங்கர் 4

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 4 வேலூரை சேர்ந்த ஜெகதீஸ்வரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட சுமதி, சுந்தரி ஆகியோரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தான். சுமதியையும் சுந்தரியையும் தொழிலுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை தமக்கு தெரியாமல் அவர்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுடலையை கொன்று எரித்து அவனுடைய சாம்பலை கடலில் கரைத்ததாக கூறியுள்ளான். இதே போன்று, சுடலை காணாமல் போனதாக தேடி வந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தான் . மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு... அவர்கள் மூவரும் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து செல்லும் பொழுதும் பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாகவும் ஆகையினால் அவர்களையும் திட்டமிட்டு போட்டு தள்ளியதாக கூறியிருக்கிறான் சங்கர். இந்நிலையில், சங்கரின் நான்காவது மனைவியும் ஆசை காதலிகளில் ஒருத்தியான லலிதாவையும் கொன்றது குறித்து, சங்கரின் தம்பி மோகன் வாக்குமூலம் அளித்தான். அதில், பெங்களூருவை சேர்ந்த லலிதாவை ஆட்டோ ஓட்டுநர் சுடலைதான் சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், லலிதாவின் அழகில் மயங்கிய சங்கர், சுமதி, சுந்தரியை போன்று லலிதாவையும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான். ஆனால், சங்கரின் முரட்டு தனமான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த லலிதா, சங்கரை விட்டு சுடலையோடு ஓட்டம் பிடித்ததால் சுடலை மீது சங்கர் கோபத்தில் இருந்ததாக கூறியுள்ளான். இதனையடுத்து பல்லாவரத்தில் சுடலையுடன் தங்கியிருந்த லலிதாவை சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்தே சுடலையை கொன்று எரித்தாகவும், ஆத்திரம் தீராத சங்கர் லலிதாவையும் கழுத்தை நெரித்து அடித்து கொன்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிய வந்தது. இந்த கொலை குற்றங்கள் தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 2 வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சங்கர் உள்பட 10 பேர் மீது 1100 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆள் கடத்தல், சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 9 நடுவர் மன்ற நீதிபதிகள், 5 காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உள்பட உள்பட 134 பேர் சாட்சியம் அளித்தனர். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ஆட்டோ சங்கர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட வேண்டும் . வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆட்டோ சங்கர் உள்ளிட்ட 5 பேர் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின....

Sunday, January 3, 2021

ஆட்டோ சங்கர் 1

By வரலாறு சுரேஷ் #ஆட்டோ_சங்கர் நாள் 1 தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கேட்டிருக்கிறோம். சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம். நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும் கண்டு பிடிப்புகளோடும், ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து, போட்டியும் பொறாமையும் வளர்ந்து, சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை. இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக, 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால், சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாய் இருக்க மாடடார்கள். தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்... 1988ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி சென்னை மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று இளைஞர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இங்கு தான் இந்த கதைக்கு ஆரம்ப புள்ளி எழுதப்பட்டது. காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பத், டெய்லர் தொழில் செய்து வந்தார். மோகன், பொதுப்பணித்துறையில் ஊழியராக இருந்தார். இவர்கள் இருவரின் நண்பர் கோவிந்தராஜ். இந்த மூவரும் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார், அவர்கள் மூவரும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு கடைசியாக சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு இவர்கள் சென்றதை அறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸாரின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் தமிழகத்தை உலுக்கும் வண்ணம் இருந்தன. இந்த சம்பவத்தில் காணாமல் போன மூன்று நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டார்களா எனும் கேள்விக்கு விடை தேடும் முன்பாக ஆட்டோ சங்கர் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 1980 ஆண்டு காலகட்டம் என்பது தமிழகத்தில் சாராய வியாபாரம் கொடி கட்டி பறந்த நேரம் என சொல்லலாம். அப்போதெல்லாம் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்ததால் மதுக்கடை நடத்துபவர்கள் அந்தந்த பகுதிகளில் குட்டி தாதாவாகவே வளம் வர தொடங்கியிருந்தார்கள். கோவில் திருவிழா தொடங்கி, கட்சி கூட்டம் நடத்துவது வரை இவர்களின் நன்கொடைகள் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதால் காவல் துறையினரை கையில் போட்டுக் கொண்டு சாராய வியாபாரத்தில் கோடி கோடியாய் கொடி கட்டிப்பறந்தனர். அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலரில் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தவன் தான் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஷங்கர். இவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு திருவான்மியூர் சுற்று வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவனாகவும், பணபலம் படைத்தவனாகவும் இருந்தான் ஆட்டோ சங்கர். கௌரி சங்கர் எனும் இயற்பெயர் கொண்ட ஆட்டோ சங்கர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து டீ கடை வைத்திருந்தார் ஆட்டோ சங்கரின் தந்தை தங்கராஜ். இங்கு வந்த பிறகு வேலூரை சேர்ந்த ஜெயலட்சுமியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவன் தான் சங்கர். ஆனால் சில ஆண்டுகளிலேயே ஜெயலட்சுமி பிரிந்து சென்று வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் தான் சங்கர் தந்தையால் வளர்க்கப்பட்டான். சங்கருக்கு சிறு வயதிலேயே பணக்காரனாக வாழ வேண்டும் என்கிற ஆசை தொற்றி கொண்டுவிட்ட்து. அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய தீர்மானித்திருந்தான். பியுசி வரை படித்திருந்த சங்கருக்கு அதற்கு மேல் படிப்பில் நாட்டமில்லாததால், ஆட்டோ ஓட்டும் நண்பர்களின் அறிமுகம் இருந்ததால், தானும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதென முடிவெடுத்தான். இப்படித்தான் சங்கரின் முன் கதை சுருக்கம் ஆரம்பிக்கிறது... நாளை!!!!

ஆட்டோ சங்கர் 3

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 3 என்ன செய்யலாம் என யோசித்த காவல் துறையினர், சங்கரின் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் உள்ளிட்டோரை மடக்கி விசாரணையை தொடர்ந்தனர். இவர்களை கண்காணிக்க பல்லாவரம் ஆய்வாளர் தங்கமணி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் விசாரணையில் மணியும், ஜெயவேலும் உண்மையை மறைத்து விட பாபு நடந்த அனைத்தையும் உளறி கொட்டினான். பாபு கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆட்டோ ஷங்கருடன் இணைந்து சம்பத், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான் பாபு. எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு தூக்கிவாரி போட்டது போலீசாருக்கு. பாபுவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தெனாலி கால்வாய்க்கு அருகே இருந்த பெரிய குடிசை வீட்டுக்குள் நுழைந்தனர் போலீசார். தோண்ட தோண்ட வரிசையாக அழுகிய நிலையில் 3 பிணங்களை கண்டெடுத்த போலீஸாருக்கு தலை சுற்றியது என்றே சொல்லலாம். இதுமட்டுமல்லாமல், அருகேயிருந்த குடிசை வீட்டின் பின்புறமும் தோண்டும் படலம் தொடர்ந்தது. அங்கேயும் ஒரு பிணம். ஒரே நாளில் 4 சடலங்கள் தோண்டி எடுக்கப்படட சம்பவம் செய்திகளில் பரவ தமிழகம் பரபரப்பாகியது. இது தொடர்பான விசாரணையில் சம்பத், மோகன், கோவிந்தராஜ் மட்டுமல்லாது மேலும் இருவர் கொல்லப்பட்டதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பதும் மற்றொருவர் பாலியல் தொழிலுக்கு பெண்களை கொண்டு வரும் சுடலை என்பதும் தெரிய வந்தது. மேலும் 4 பேரை புதைத்துவிட்டு சுடலையை எரித்து கடலில் கரைத்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 1988ம் ஆண்டு ஆட்டோ சங்கரும் அவனுடைய தம்பி மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களையும் சேர்த்து 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி ஜானகி தலைமையிலான ஆட்சியும் பெரும்பான்மையின்றி ஆட்சி கவிழ்ந்து தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் இதுகுறித்து உடனே விசாரிக்கும் படி ஆளுநர் பி.சி.அலெக்ஸ்சாண்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், சங்கரின் நண்பர்களில் ஒருவரான பாபு அப்ரூவராக மாறிவிட, அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினார்கள் போலீசார். சங்கரின் மனைவியிடமும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடைபெற்றது. பிணங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சங்கரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அவனுடைய டயரியில் அரசியல் புள்ளிகள், காவல் அதிகாரிகள் உள்பட பலருக்கு பணம் கொடுத்த விவரங்கள் தெரிய வந்தன. தன்னுடைய காதலிகளோடு சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு அவனுடைய மெத்தையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், கடைசி வரையிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தொடர்பான உண்மைகள் வெளியில் வராத வண்ணம் பார்த்து கொண்டனர் போலீசார் என கூறப்படுகிறது. சங்கரும் அவனுடைய தம்பியும் இணைந்து தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து 6 பேரை கொலை செய்ததில் 6ஆவதாக கொலை செய்யப்பட்டவர் சங்கரின் 4 வது மனைவி லலிதா. அப்போது, சங்கருக்கு நிறைய காதலிகள் இருந்தனர். சங்கர் தன்னுடைய காதலிகள் மற்றும் மனைவிகளின் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது லலிதா காணாமல் போனது குறித்தும் போலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், சங்கர் மீதான கொலைக்கு குற்றங்களுக்கு பயந்து லலிதா தலைமறைவாகி இருக்கலாம் என முன் அனுமானத்தில் அதனை கவனிக்காமல் விட்டிருந்தனர். ஆனால், லலிதாவும் கொலை செய்யப்பட்டார் என்கிற உண்மை விசாரணையின் பின்னரே தெரிய வந்தது. திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டில், சமையலறையின் கீழே , நிர்வாண கோலத்தில் லலிதா புதைக்கப்பட்டது சங்கரின் தம்பி அளித்த வாக்குமூலத்திற்கு பின்னரே தெரிய வந்தது. பெங்களூரை சேர்ந்த லலிதா, தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை, திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, மந்தவெளியை சேர்ந்த சம்பத், பொதுப்பணித்துறை ஊழியர் மோகன், மந்தைவெளி கோவிந்தராஜ் ஆகிய 6 பேர் சங்கரின் பண மோகத்தால், பெண்கள் மீதான காமுக சிந்தனையாலும் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பான விசாரணையில் 6 பேரையும் கொன்றது குறித்து விலாவரியாக தெரிவித்திருந்தான் சங்கர். நாளை....

ஆட்டோ சங்கர் 2

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 2 நாளுக்கு நாள் ஆட்டோ தொழில் போரடித்த நிலையில் சாராயம் கடத்துவதில் ஈடுபட்டான். தமக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அதனைக் கொண்டு சாராய வியாபாரிகளிடம் நட்பு வளர்த்து கொண்டான். திருவான்மியூரில் இருந்து கோவளம் கடற்கரைக்கு சாராயம் கடத்தினால் கிடைக்கும் வருமானம், பல மடங்கு அதிகம் இருந்ததால் அந்த தொழிலையே பிரதான தொழிலாக மேற்கொண்டான். இருபத்து நான்கு மணி நேரமும் கையில் பணம் புரண்டதால் முழு குடிகாரனாக மாறியிருந்த சங்கருக்கு நாளடைவில் பெண்கள் சமாச்சாரமும், அதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழில் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தான் சங்கர். முக்கிய பிரமுகர்களுக்கு பெண்களை அனுப்பும் போது, அவர்களுக்கு தெரியாமலேயே அதனை வீடியோ எடுத்து கிடைக்கும் சமயத்தில் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டான். ஆட்டோ தொழிலை நிறுத்திய பின்னரும் இவனுடைய அடையாளமாக இருந்தது ஆட்டோ எனும் அடைமொழி. அந்த பெயரை கேட்டால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஒரு உருவம் மனதுக்குள் வந்து போகும் அளவுக்கு தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருந்தான் சங்கர். ஆகவேதான் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பெரிய புள்ளிகள், காவல் அதிகாரிகளை கவனித்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டான் . இது போதாதென்று ஏழை குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுவது உள்ளிட்ட சில நல்ல காரியங்களையும் செய்து கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் காணாமல் போன மூன்று பேர் குறித்து ஆட்டோ சங்கரிடம் விசாரிக்க போலீசார் யோசித்தனர். ஒரு வழியாக சங்கரை நெருங்கிய போலீசார், காணாமல் போன மூவரும் கடைசியாக உங்கள் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல் என்கிறார்கள். அதற்கு ஆட்டோ சங்கர், "அப்படியா? எனக்கு தெரியாதே.. அப்படி யாரும் இங்கு வரவில்லையே" என்று கொஞ்சமும் பதட்டமில்லாமல் கூறி வைத்தான். ஆனால், போலிஸாருக்கு சந்தேகம் என்னவோ ஆட்டோ சங்கரின் மேல்தான்.... நாளை...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!