Wednesday, April 4, 2012

இருட்டுக்கடை இருட்டோடு சூறையாடப்பட்டது, நடந்தது என்ன...?

எனது முந்தய பயணம்....

மஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....!!!

கார் ஜென்னத் ஹோட்டலை அடைந்ததும், திவானந்தா சுவாமிகள் உடனே வேலையில் பிசி ஆகிவிட்டார், ஆபிசரின் சில பல ஆர்டர்கள் பறக்க, ஆபிசரின் சைக்கிள் ஸாரி பைக் கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தது சன்முகப்பாண்டி.



ஹோட்டலில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, சரி கிளம்புவோம்னு நானும் விஜயனும் கிளம்ப, ஆபீசர் பஸ்நிலையம் என் வீட்டு பக்கத்தில்தான் இருக்கு வாங்க அப்படியே வீட்டுக்கு வந்துட்டு அப்புறமா நானே உங்க ரெண்டு பேரையும் பஸ்நிலையம் கொண்டு சேர்க்கிறேன்ன்னு சொல்லவும் கிளம்பினோம்.

அழகான அமைதியான இடம் ஆபீசர் வசிக்கும் இடம், அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் நெல்லை புதிய பஸ் நிலையம் அழகாக தெரிகிறது [[நமக்கு வேண்டப்படாதவர்கள் யாராவது நெல்லை வந்தால் ஆபீசர் வீட்டு மாடியில் இருந்தே சுட்டு விடலாம் ஹி ஹி எலேய் விக்கி நோட் பண்ணிக்கோ]]

ஆபீசர் வீட்டு முன்னே அழாகாக பூத்து குலுங்கும் ஒருவித மஞ்சள் கலர் பூ பூக்கும் செடி படுகவர்ச்சியாக இருந்தது, நானும் விஜயனும் ரசித்து பார்த்து கொண்டிருந்தோம், அப்போது எங்கள் கண்ணுதான் பட்டுச்சோ என்னமோ இரண்டு வயதான பெண்கள் வந்து அந்த பூக்களை நோக நோக பறித்து சென்றாகள். ஆபீசருக்கும் எங்களுக்கும்தான் அந்த பூக்களின் வேதனை தெரிந்தது மனதில்....


ஆபீசர் அவர்களை மிரட்டி அனுப்பவும் இல்லை பார்த்து கொண்டேதான் இருந்தார், ஓ பெண்களும் பூக்கள்தானே'ன்னு நினைச்சுட்டார் போல.........துளசி செடியும் நிறைய வளர்த்து வருகிறார் மிகவும் அழகாக இருந்தது....!!!

வீட்டுக்குள் நுழைந்ததும் ஆபிசரின் மனைவியும், மகள் பிருந்தா'வும் அன்பாக வரவேற்றார்கள், ஆபீசர் வீட்டை எல்லாம் சுற்றி சுற்றி காட்டினார், ஒழுங்காக பிளான் பண்ணி ரசித்து கட்டப்பட்டவீடு அழகு....!!


மறுபடியும் ஹாலில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம், பிருந்தாவின் அறையில் இருந்து ஒற்றை நாணயம் பாடல் கல்யாண கனவுகளுடன் கசிந்து கொண்டிருந்தது மனதுக்கு பரவசமாக இருந்தது...!

விஜயன் வந்தவேலை முடிந்து விட்டது சரி, உடனே எனக்கு மும்பைக்கு டிக்கெட் புக் பண்ணிருங்க நான் கிளம்புறேன்னு சொன்னதும் தேதி சொல்லுங்கன்னு சொன்னதும் டேட் சொன்னதும் குறித்து கொண்டார் [[இப்பவும் நான் குடும்பத்தோடு நாகர்கோவில் வர டிக்கெட் எடுத்து மும்பைக்கு போஸ்ட் செய்ததும் அவர்தான், நன்றி மக்கா]]


அப்புறமா ஆபீசர் வீட்டு ஹாலில் கொஞ்சம் மெயிண்டணன்ஸ் வேலை இருந்தபடியால் பணியாளர்கள் வரவும் ஆபிசரின் வீட்டு ஆபீசில் அமர்ந்து நாங்கள் எடுத்த போட்டோக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டோம்.


இதுல ஒரு காமெடி என்னான்னா விஜயன் எடுத்த போட்டோ எல்லாம் அவர் கேமராவில் ஏதோ வைரஸ் புகுந்து திங்க ஹே ஹே ஹே ஹே நான் டவுன்லோட் பண்ணி வச்சிகிட்டது எனக்கு வசதியா போச்சு. அவர் போட்டோ எல்லாம் போட்டு நிறைய பதிவை அழகாக தேற்றிவிட்டேன்....!!!

டீ கொண்டு தந்தார்கள் ஆபிசரின் மனைவி, அந்த டீ தாயன்போடு பரிமாறப்பட்டதாலோ என்னவோ அம்புட்டு இனிப்பும் அன்பும், ஆபீசருக்கு ஏற்ற அதே அன்புள்ளம்தான் அவர்களுக்கும், நல்ல ஜோடி பொருத்தம், அந்த டீ'யின் இனிப்பு இப்போதும் எங்கள் நாவிலும் மனதிலும் இனித்து கொண்டிருக்கிறது....!!!


அய்யய்யோ விஜயன் ஆபிசரின் மருமகன் வரும் நேரமாகி விட்டது வாங்க உடனே கிளம்புவோம்னு விஜயனுக்கு கண்ணை காட்டியதும், ஐயோ ஆமால்ல என்று மெய்மறந்திருந்த விஜயன் நிமிர்ந்தார்.

ஆபீசர் வீட்டில் எல்லாரிடமும் விடை பெற்று கிளம்ப, ஆபிசரின் பைக்கில் ஒவ்வொருவராக பஸ்நிலையம் [[அருகில்தானே]] கொண்டு செல்ல ஏற்பாடு ஆனது முதலில் நான், பைக்கில் ஏறப்போனால் அங்கே காலை அங்கிட்டு இங்கிட்டு போடமுடியாமல் ஒரு பாக்ஸ் இருந்து தொலைக்க.....


பெண்கள் அமர்வதைப்போல அமரவேண்டி வர ஆபீசரை கட்டி பிடித்து கொண்டு பெண்கள் போல அமர, மேலே ஆபீசர் வீட்டுக்காரங்க எல்லாம் சிரித்து உருள, சரி இப்பிடியே விட்டுருவாங்கன்னு பார்த்தால், ஆபீசர் விஜயனை கூப்பிட்டு போட்டோ எடுக்க வைத்து விட்டார் [[ஆஹா மாட்டுனியா மக்கா]] ஆனால் அந்த போட்டோ எங்கே போச்சுன்னே தெரியலை ஹி ஹி....

என்னை கொண்டுபோயி பஸ்நிலையம் நிறுத்தி விட்டு விஜயனை தூக்கி வரப்போனார் ஆபீசர், நான் பெண் மாதிரி இருந்ததை போட்டோ எடுத்த ராசா நீரும் அப்பிடித்தானே வருவீர் ராஸ்கல் போட்டோ எடுக்கிறேன்னு கேமராவை ரெடி செய்தேன், ஆனால் உஷாரான விஜயன், காலை அங்கிட்டும் இங்கிட்டுமாக போட்டு ஜம்முன்னு வர........ ச்சே வடை போயி போச்சு போங்க...[[அந்த போட்டோவும் காணமல் போனது தனிக்கதை]]


வண்டியை நிறுத்திவிட்டு ஆபீசரும் பஸ் நிலையம் நுழைய, விஜயன் தடுத்தார் நீங்க போங்க ஆபீசர் விருந்தாளிங்க வீட்டுக்கு வாராங்களேன்னு சொல்ல இல்லை இப்பதான் போன் வந்துச்சு அவங்க வர கொஞ்சம் லேட்டாகும்னு அதான் உங்களை பஸ் ஏற்றி விட்டே போகிறேன்னு சொல்லி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களை பஸ் விட்டு பஸ் மாற்றி ஏறவைத்து டாட்டா காட்டி அன்போடு அனுப்பி வைத்தார்...!

பஸ்சில் ஏறியதும் ஸாரி புறப்பட்டதும் எனக்கும் விஜயனுக்கும் சண்டை யார் டிக்கெட் எடுப்பது என்று, எப்போ பார்த்தாலும் எங்கே போனாலும் அவர்தான் பணம் கொடுத்துட்டு வாரார் என்று கடுப்பானேன் [[அன்பாதேன்]] சரிய்யா குடுத்து தொலையும்னு ஒதுங்கிட்டார் ஹி ஹி..


அப்புறம் பஸ்சில் பல விஷயங்கள் பேசி மகிழ்ந்தாலும், நாங்கள் டவேரா காரில் கேட்ட ஒரு பாடல் எங்கள் வாயை முணுமுணுக்க வைத்ததை நினைத்து பாடகி லதா மங்கேஷ்கரை புகழ்ந்து தள்ளினோம். அந்தப்பாடல் "காலை தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" உயர்ந்த உள்ளம், கமல், அம்பிகா நடித்தது...!!!

மும்பை செல்ல ஆயத்தமான நாள், நாகர்கோவில் டூ மும்பை செல்ல நண்பன் ராஜகுமார் ரயில்வே கொண்டு சேர்த்தான், ஆபீசர் என்னை பார்க்க நெல்லை ரயில் நிலையம் வந்திருப்பதாக சொன்னார், சொன்னது போல வந்தும் விட்டார் உதவியாளரையும் கூட்டிக்கொண்டு.....


எனக்கு காலை உணவும், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர் [[மிக்க நன்றி ஆபீசர்]]


ஆபீசர் சொன்ன ஒரு அல்வா சாப்பிடும் டிப்ஸ் என்னான்னா, அல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம் இருட்டுக்கடை அல்வாவை ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாமாம், ஆபீசர் தந்த அல்வா இன்னும் சாப்பிட்டு முடியவில்லை....!!

டிஸ்கி : கடைசி இரண்டு படம் ஆபீசர் எடுத்தது ஆனால் நான் சுட்டது கௌசல்யா பேஸ்புக் போட்டோ செலக்சனில்.....நன்றி.....

பயணம் முற்றும்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!