Saturday, June 23, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 4...!


கடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அது நடக்கவில்லை, மாறாக வீட்டில் வந்து சார்ஜரில் போட்டபோது கீழே விழுந்து கோமா"வாகி விட்டது.

ஒருநாள் முன்பாகவே கல்யாண வீட்டிற்கு போகணும்ன்னு குடும்பம் அடம் பிடிக்க, அடுத்தநாள் நாகர்கோவில் [வடசேரி] பேரூந்து நிலையத்தில் குடும்பத்தை பஸ் ஏத்தி விட்டுட்டு [நான் கல்யாண நாளன்று போவதாக உத்தேசம்] விஜயனை பார்க்க கிளம்பினேன், மழை பொழிய கருமேகங்கள் விரைந்து கொண்டிருந்தன.
கன்னியாகுமரி கடல், என் செருப்பையும், வாட்சியையும் பதம் பார்த்திருந்தது, வடசேரி பஸ் நிலையம் அருகில் செருப்பை தைத்து விட்டு, பொடி நடையாக நடந்தே விஜயனை பார்க்க சென்றேன்.

மோனிஷா டிரேடர்ஸ் இடம் மாறிய படியால், இடம் தெரியாமல் விஜயனுக்கு போனைப் போட்டேன், "சேவியர் இறைச்சி கடை எதுத்தாப்புல வாரும்"ன்னு சொன்னார், அவர் பழைய ஆபீஸ் பக்கமும் இறைச்சி கடைகள் இருப்பதால் அந்த பக்கமாக நடந்து சென்றபோது, ஒரு இறைச்சி கடைக்காரர் கூப்பிட்டார் "வாங்க சார் இப்போதான் வெட்டினோம் பிரெஷா இருக்கு"ன்னார், எட்டிப் பார்த்தேன், பன்னியார் தொங்கிட்டு இருந்தார், அதுக்குள்ளே விஜயன் போன் வர, சந்தித்தோம்.
மனுஷன் மார்க்கண்டேயன் போல எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு பார்த்த அதே கிளாமர் உடம்புடனும், மனசுடனும் இருந்தார், பேச்சில் செமையான தன்னம்பிக்கையும், சந்தோஷமும் தெரிந்தது, மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, முன்பிருந்ததைவிட ஆபீஸ் இப்போதிருக்கும் இடம் நல்ல சவுகரியமாக இருக்கிறது என்கிறார், எனக்கும் அப்படியே பட்டது.

அப்படியே இம்சை அரசன் பாபுவுக்கு போன் செய்ய...அவர் பிஸியா இருந்தார், ஆபீசரும் பிஸி.
அப்படியே பேசிட்டு இருக்கும்போது எதுத்தாப்புல இருக்கும் ரெண்டு இறைச்சி கடைகள் பற்றி பேச்சி வந்தபோது, சேவியர் கடையில்..... வாங்கிய விலையில் இறைச்சி வெட்டி கொடுப்பார்களாம், மாடு, ஆடு, கோழி ஏதா இருந்தாலும் அதேதான், அப்போ லாபம் ?ன்னு கேட்டபோது விஜயன், "இஷ்டம் போல சொத்து காசு பணம் இருக்கு வேற என்ன வேணும் ?"

"அப்போ நல்லதுதானே விஜயன், மக்களுக்கு சேவை செய்கிறார் போல"

"ரொம்ப ரொம்ப நல்ல மனசு..."

பக்கத்துல இருக்குற இறைச்சிக் கடையும் கொஞ்சம் டெக்னீக்காக லாபம் சம்பாதிப்பதாக சொன்னார், என்ன...... கூட்டமெல்லாம் சேவியர் இறைச்சி கடையில்தான் கியூவுல நிக்குமாம்.

மணிமேடை பக்கமாக வந்தபோது ஒரு மொபைல் கடை தென்பட, "டிஸ்பிளே போயிருச்சு புதுசு மாற்ற எவ்வளவு ஆகும்"ன்னு கேட்டதுக்கு, 4500 ஓவான்னு கூசாம கேட்டான்...

 மொபைல் கோமா கதையை கேட்டதும், விஜயன் அவருடைய நண்பனின் கடைக்கு கூட்டி சென்றார், சன்டே என்பதால் எல்லாக்கடையும் பூட்டு என்பதால் டிஸ்பிளே ஐடியா தள்ளிப்போனது.

மத்தியானம் ஆகிவிட்டதால், சாப்பாட்டுக்கு விஜயன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கு பிளான் பண்ணுவது தெரிஞ்சதும், சாதா சின்ன ஹோட்டல்ல வாழையிலை மீன்கறி சாப்பிடுவோம் விஜயன்னு சொன்னதும் மனமில்லாமல் ஒத்துக்கிட்டார்.
சன்டே ஆனதால் அதுவும் தட்டுப்பாடுதான், நாகர்கோவில் தெருக்களில் ஹோட்டலுக்காக அலைந்தும், ஏதோ அஹ்ரகாரத்துக்குள்ளே பைக் போயிகிட்டு இருந்துச்சா...என்னடா மீன்கறி சாப்பாட்டுக்கு அஹ்ரகாரத்துக்குள்ளேயா கூட்டிட்டுப் போவாங்கன்னு நினைக்கும்போதே வண்டி யூட்டர்ன் அடிச்சது, வலது பக்கத்துலேயே அசைவ சாப்பாடு ஹோட்டல்.
நெய் மீனுன்னு பொறிச்ச மீன் வைத்து மீன்கறியும் ஊத்த...கலரெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, சாப்பாடுதான் சொதப்பிருச்சு இந்த தடவை, எப்பிடித்தான் சொதப்பினாலும் அவ்வளவு சாப்பாட்டையும் விஜயன் சாப்பிட்டு விட்டார், "என் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்கிறேன் மனோ சாப்பாட்டை விரயம் பண்ணக்கூடாதுன்னு" என்று சொல்ல...சோறு மிச்சம் வைக்கணும்ன்னு நான் நினைச்ச பிளான் மண்டைய போட்டுருச்சு.

சரி, மத்தியானம் கழியும் நேரம், விஜயனும் பிஸி, குடும்பமும் நெல்லை போயாச்சு, இன்று முழுவதும் நேரம் போகணுமேன்னு..."விஜயன், தங்கம் தியேட்டர்ல என்னை டிராப் பண்ணிருங்க, இரும்புத்திரை படம் பார்த்துட்டு ஊருக்கு கிளம்பிறேன்னதும், ஒரு மாதிரியா ரோசிச்சார் அப்புறம் ஓ ரைட் என்று டிராப் பண்ணினதுமல்லாமல் படம் துவங்கும் சற்று முன்பு வரை என்னோடே நேரம் செலவிட்டு கிளம்பினார்.

மிக்க நன்றி விஜயன்....

என்னாது இரும்பு திரை"யா ? பாதி வரை ஜொதப்பல், அர்ஜுன் வந்த பின் ஓகே...விஜயன் ரோசிச்சதும் இதுக்குதான் போல.

என் போன் தன் ஜீவனை விட்டதுனால ஒரு போட்டோ கூட எடுக்க முடியலை, எல்லாமே கூகுள் அண்ணாச்சி தந்ததுதான் !

மொபைல் டிஸ்பிளே மும்பையில் வந்துதான் மாற்றினேன், வெறும் 800 ஓவாதான் !

Thursday, June 14, 2018

மனம் நிறைவான ஊர் பயணம்...3 !



மகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், "இல்லை டாடி மும்பையில் என் கிளாஸ் மேட் கன்னியாகுமரி வந்ததாக சொன்னாள், அதுக்கு நான், எங்கள் ஊரே கன்னியாகுமரிதான் என்றேன், அதுக்கு அவள் பல கேள்விகள் கேட்டாள், விவேகானந்தா ராக், வள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், முக்கடல் சங்கமம் என்று, எனக்கு ஒன்னுமே தெரியலைன்னதும் கிண்டல் பண்ணிகிட்டே இருக்கா"
சின்ன அண்ணன் மகன் பிரகாசும் நானும் காட்சி கோபுரத்திலிருந்து அய்யன் வள்ளுவருடன்.

அதான் ஏற்கனவே பலமுறை உன்னை கூட்டிப்போயி காட்டிருக்கேனே என்றதும், இல்லை அப்போது எனக்கு நினைவில்லை இப்போ கூட்டிட்டு போங்க என்றதும் சரி என்றேன்.
நண்பன் ராஜகுமார் மகள் பபி.

நாங்கள்தான் குடும்பமாக போகணும்ன்னு ஏற்பாடு, நாம நினைக்கிறது எங்கே நடக்குது அங்கே...? ரெண்டு அண்ணன் பிள்ளைங்க, நண்பன் ராஜகுமார் பிள்ளைங்கன்னு மொத்தம் நான்கு குடும்பம் கன்னியாகுமரி நோக்கி கிளம்பினோம் காலையில்.
காந்தி மண்டபத்தின் முதல் மாடியில் கடலின் காற்றோடு...சின்ன அண்ணன் மகள், நண்பனின் மகள், என் மகள்...முகம் தெரியாமல் அமர்ந்திருப்பது சீவலப்பேரி.

கன்னியாகுமரி பஸ் நிலையம், நான் ஆரம்பத்திலிருந்து பார்த்த அதே கன்றாவியாதான் இப்போவும் இருக்கு பாத்ரூம் தவிர, திண்பண்டம்ன்னு எதையாவது வாங்கி சாப்பிட்டுறாதீங்க டீ  கடையில், கண்டிப்பா உள்ளே புழு இருக்கும்.
கன்னியாகுமரி காட்சி கோபுரம்.[இதற்கு ஒரு வரலாறு உண்டு] உள்ளே ஒரு சின்ன பாறை தெரிகிறதா ? அதுதான் முக்கடலும் சந்திக்குமிடம் !

கடலின் பிரமிப்பைக் கண்டு மகள் பிரமித்து போனாள், மும்பையில் ஆழமே இல்லா அழுக்கு ஜூ பீச்சை பார்த்தவள், இந்தியப் பெருங்கடலின் அழகையும் ஆக்ரோஷத்தையும் கண்டு களித்தாள்.
தெப்பக்குளம் மாதிரி தெரிந்தாலும் கடலின் ஆக்ரோஷ சீற்றமும், அதன் அலையின்  இழுப்பும் பயங்கரமாக இருக்கும், நான் உக்காந்திருப்பது ஒரு பாறையில், இடது கையால் பாறையை பிடித்துக்கொண்டு மகள்களின் கையை பிடித்து வைத்திருக்கிறேன் இல்லேன்னா கடல் உள்ளே இழுத்துட்டு போயிரும்.

காட்சி கோபுரத்தில் மேலே போகப் போக இன்னும் இந்தியப் பெருங்கடலின் அழகும் சீற்றமும் அதிகரித்துக்கொண்டே போனது, எனக்கு மட்டும் சுனாமி பயம் மனதிலும் வயிற்றிலும் உருண்டு கொண்டேயிருந்தது.
வாழையிலை சாப்பாடு, கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷன் நேரெதிரில்.

வழி நெடுக ஜூஸ், ஐஸ்கிரீம், உப்பிட்ட மாங்காய், உப்பிட்ட அண்ணாச்சி பழம், அது இதுன்னு பர்ஸை பதம் பார்த்துக்கொண்டே வந்தார்கள், அடிச்ச வெயிலும் அப்படி, என்னைவிட பிள்ளைகளின் ரசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, பின்னாலேயே நான் அவர்களை ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.
காந்தி மண்டபத்தில் அமர்ந்து கொண்டு...பின்னால் தெரிவது காமராஜர் மணி மண்டபம்...சின்ன அண்ணன் மகன் பிரகாஷ், ராஜகுமார் மகன் பாஸ்.

காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரவே மணி மாலை மூன்றாகி விட்டது, பிள்ளைகளுக்கு, பசிக்கும் என்று, காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரும் வழிகளிலெல்லாம் ஹோட்டல் இருக்கிறது ஆனால் வாழையிலை சாப்பாடு இல்லவேயில்லை.

ஹோட்டல் காரரிடம் கேட்டதுக்கு கன்னியாகுமாரில எங்கேயும் வாழையிலை சாப்பாடு கிடையாது சார் என்கிறார், உங்களுக்கு எந்த ஊர்ன்னு கேட்டேன், திருச்செந்தூர் என்றார், போய்யா நான் உள்ளூர் காரன் என்கிட்டேவா ? போலீஸ்ஸ்டேஷன் எதுத்தாப்ல ஒரு ஹோட்டல் இருக்கு வாரியா காட்டுறேன் என்றதும் நெஞ்சில் கைவைத்து வணங்கி விடை கொடுத்தார்.
ராஜகுமார் மகன் துறு துறுன்னு கடலுக்குள்ளே பாய...அலை இழுத்து செல்லாமலிருக்க காலால் அடை கொடுத்துட்டு இருக்கேன்.
பீச் ரோட்டில் குடும்பமாக தெருவில் நின்றபோது[அவ்வ்வ்]

பெரிய அண்ணன் மகன் ஜோஷ்வாவுடன்.

பொதுவாவே கன்னியாகுமரியில், உள்ளூர்க்காரன்னு சொன்னதும் பவ்வி விடுவார்கள், காரணம் நாம் பேசும் ஸ்லாங், அடுத்து உடனடியாக விழும் அடி, காரணம்.... அங்கே தொழில் செய்யும் முக்கால்வாசி ஆள்கள் வெளியூர்காரர்கள்.

தொடரும்....

Wednesday, June 13, 2018

மனம் நிறைவான ஊர் பயணம்...! 2.



ரயில் பயணத்தில் இப்போது பயோ டாய்லெட் வசதி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பழைய டாய்லட்டும் பயோ டாய்லெட்டுமாக இருக்கிறது, நம்மாளுகளுக்கு இன்னும் பயோ டாய்லெட் பற்றிய விபரம் சரியாக தெரியவில்லை, அதனால் பழைய டாய்லெட்டையே நாஸ்தி ஆக்குகிறார்கள் !

ஆனால் திரும்பும்போது கன்னியாகுமரி மும்பை எக்ஸ்பிரஸில் [ஜெயந்தி ஜனதா] எல்லா டாய்லெட்டுமே பயோ"தான்.

நாகர்கோவிலில் வந்திறங்கி காலை 3.30 ஆனதால் ரயில்வே ஸ்டேஷனிலேயே கொஞ்சம் உக்கார்ந்து டீ சாப்பிட்டுவிட்டு டாக்சியில் ஊரை நோக்கி கிளம்பினோம்.

குளித்து முடித்து குடும்பங்களை சந்திக்க சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி என்னை புரட்டி போட்டது, ஆம்...என் உயிர் நண்பன் ராஜகுமாரனுக்கு பைக்கில் விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருப்பது தெரிந்து அதிர்ந்து போனேன்.

அவனைப் பார்க்க சென்றால்...நீ வருத்தப்படுவேன்னு நான்தான் உன் கிட்டே சொல்லக்கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சேன் மக்கா என்றான்...எப்போதுமே அவனருகில் அமர்ந்து அவனோடு நேரம் செலவிட்டேன்.

இந்தமுறைதான் நடந்தே ஊரை சுற்றி வர முடிந்தது, மகளையும் வீட்டம்மாவையும் நடத்தியே ஊரை சுற்றி பார்க்க வைத்தேன், அவர்கள் புலம்பிக்கொண்டுதான் வந்தார்கள்.


அம்மா இல்லாததால் வீடு பெருச்சாளிகள் கூடாரமாகி விட்டதால் வெளியில்தான் தங்க நேர்ந்தது, சாமிதோப்பு பதியில் வைகாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது விஷேசம்.

தொடரும்...


Tuesday, June 12, 2018

மனம் நிறைவான ஊர் பயணம்...!


ஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரும்பினது தனி கதை....

மும்பை ஏர்போர்ட் வந்திறங்கியதும், குடும்பத்தார்கள் வரவேற்று கூட்டி சென்றனர், நண்பன் கிருஷ்ணாவின் குடும்பமும் வர, அவனுடைய காரிலேயே [இனோவா] வீடு போயி அவனும் குடும்பமாக என் வீட்டில் தங்கி, அடுத்த நாள், அண்ணே அடிக்கிற வெயிலுக்கு எங்கேயாவது போயி நல்லா குளிப்போம்ண்ணே என்று அம்பர்நாத் அணைக்கு கூட்டி சென்றான்.
அம்பர்நாத் அணைக்கட்டு [இந்த அணைக்கட்டில் குடித்துவிட்டு உள்ளே குதித்து சாவை அருகில் பார்த்து காப்பாற்ற பட்டு வந்த ஒருவனையும் பார்க்க நேர்ந்தது கொடூரமான அனுபவம்]

குழந்தைகளோடு அன்று முழுவதும் விளையாட்டும் கூத்துமாக சந்தோஷமாக கழிந்தது, சரி ஊருக்கு உடனே கிளம்ப வேண்டும், சீசன் நேரமாதலால் டிக்கெட்டும் பிரச்சினையாக இருக்க, கிருஷ்ணாவே 23 தேதிக்கு அவன் நண்பன் மூலமாக ரெடியாக்கி தந்தான்.
குதூகலமாக தங்கை மகள் மகிஷா.

அன்றும்  என் வீட்டில் குடும்பமாக தங்கிவிட்டு அவன் வீட்டுக்கு போய்விட்டான், அவன் குழந்தைகள்தான் ஏக்கமாக பிரியா விடை கொடுக்காமல் அழுது கொண்டே சென்றார்கள்.
நண்பனின் இனோவா கார்.

அடுத்து கன்னியாகுமரி செல்ல ஆயத்தமானேன், மும்பை அனல் கொளுத்தியது வெக்கையை...
குடும்பமாக ஆனந்த குளியல்.

நானும் மகளும் வீட்டம்மாவுமாக கிளம்பினோம், ரயில் பயணத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மகள், இந்த முறை ஆர்வமின்றியே இருந்தாள், கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தும் டாடி ரொம்ப போராக இருக்குன்னு சொல்லிவிட்டாள்.
நாய்க்கும் பிரியாணி ஊட்டும் நண்பன்.

ம்ம்ம்ம்... நாகர்கோவில் நோக்கி பிரயாணம் ஆரம்பம்...ஊரின் பல பழைய நினைவுகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தேன் ஒரு பெரிய அதிர்ச்சியை அறியாமல்...

தொடரும்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!